நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!
நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பாட்னாவில் நாளை மறுநாள் நடைபெறும் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்தது.
பிகார் தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதீஷ்குமார் 10-வது முறையாக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
Advertisement
பாட்னாவில் உள்ள காந்தி திடலில் நாளை மறுநாள் (நவ.20) பதவியேற்பு விழாவுக்காக ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. இதில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா உள்பட பல தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலத்தின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லி முதல்வர் ரேகா குப்தா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கிடையில், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பிரதமர் மோடி உள்ளிட்டோரை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் முன்னதாக, கோயம்புத்தூரில் நாளை நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, சிறப்பாகச் செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியும் நாளை கோவையில் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.