சென்னையை தாக்குமா சென்யார் புயல்? புதிய தகவல்!
சென்யார் புயல் தமிழகக் கடற்கரையைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்து உருவாகவிருக்கும் சென்யார் புயல் தமிழகக் கடற்கரையைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் டெல்டா வெதர்மேன் என்றழைக்கப்படும் ஹேமச்சந்திரன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நவம்பர் இறுதி வாரத்தில் உருவாகவிருக்கும் சென்யார் புயல் தமிழக கடற்கரையைத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த அமைப்பு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. சென்யார் புயலின் தீவிரம், கரையைக் கடக்கும் இடம் ஆகியவற்றை, தற்போது துல்லியமாக கணிக்க முடியாது.
தற்போது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை மீது கவனம் செலுத்துகிறோம். இது அடுத்த 2-3 நாள்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும்.
வரும் நவ. 22-23 ஆம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகிறதா என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
நாளை முதல் அடுத்த 3-4 நாள்களுக்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை உள்பட வடதமிழகத்தில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்யார் என்ற புயலின் பெயர் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சேலத்தில் டிச. 4-ல் தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஏன்?