கரூர் சம்பவம்: 10 மணிநேரம் நடந்த சிபிஐ விசாரணை!
என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 10 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 10 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய விசாரணை இரவு 8 மணியளவில் முடிந்தது.
ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிபிஐ முகாம் அலுவலகத்தில் இன்றைய விசாரணை முடிந்த நிலையில், நாளையும் விசாரணை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாரு தவெகவின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகையில் விசாரணைக்காக ஆஜராகினர்.
இவர்களிடம் தொடர்ந்து 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து அவர்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நாளையும் விசாரணை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | உங்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பதிவேற்றப்பட்டுவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?