வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் சீமான்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, சீமான் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக். 6) சந்தித்து நலம் விசாரித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வைகோவை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், தொடர்ந்து சீமானும் மருத்துவமனை சென்று வைகோவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
கடந்த சில நாள்களாக சளி மற்றும் இருமல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த வைகோ, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Advertisement
அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரின் உறவினரிடமும் உடல் நிலை குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தற்போது சீமானும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். அவருடன் இயக்குநர் சேரனும் உடன் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் - தலைவர் ராமதாஸ் உடல் நிலை குறித்தும் சீமான் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் சீமான் பேசியதாவது,
வைகோ, ராமதாஸ் இருவரையும் சந்தித்தேன். இருவரும் நலமாக உள்ளனர். வைகோவுக்கு சாதாரண சளி, காய்ச்சல்தான். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!