உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கரூர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், சம்பவம் நடந்தவுடன் தொண்டர்களையும் ரசிகர்களையும் கைவிட்டுவிட்டுச் சென்ற விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் நீதிமன்றம் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி செந்தில்குமாரின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு அவருக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள விடியோக்களை நீக்கக்கோரியும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிறிஸ்டில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஜாய் கிரிடில்டாவின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
நீதிபதியையும் விட்டுவைக்கவில்லை
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி செந்தில்குமார் தெரிவித்ததாவது:
”சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.