நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!
நடிகை குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதைப் பற்றி...
நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டினார். ஆனால், பின்னர் 2012 ஆம் ஆண்டில் தனது புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், அவர் ஒரு புதிய புகாரை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
கடந்த செப்.12 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கோரவில்லை என்றால் சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும்” என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில், “நீங்கள் குழந்தைகள் இல்லை. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் நடிகை விஜயலட்சுமியைத் தொந்தரவு செய்யமாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் நடிகை தொடர்பான தனது அனைத்து கருத்துகளையும், பேட்டிகளையும் திரும்ப பெறுவதாக சீமான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை இன்று தாக்கல் செய்தார்.
சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கோரிய நிலையில், வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.