திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை முழுவதும் விடாமல் பெய்த கனமழையால் மொத்தம் 1,135 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதில் ஊத்துக்கோட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
திருவள்ளூர் பகுதியில் வடகிழக்குப் பருவமழை கடந்த 3 நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. இதில் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரையில் விடாமல் கனமழை பெய்தது.
இந்த மழையால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல், சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், நகராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த கனமழையால் கால்வாய்களில் நீர்வரத்து ஏற்பட்டு ஏரி குளங்களும் நிரம்பி வருகிறது.
இந்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி 33.05 அடி உயரமும், 2536 மில்லியன் கன அடிநீரும் இருப்பு உள்ளது.
இந்த ஏரியிலிருந்து இணைப்பு கால்வாயில் 300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரிக்கான நீர் கால்வாய்களில் 2,300 கன அடி நீர் வருவதால், 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல், செங்குன்றம் ஏரியில் 3,300 மில்லிலயன் கன அடி கொள்ளளவில் 2,745 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழைநீர் வரத்து 800 கன அடியாக உள்ள நிலையில், 500 கன அடி உபரிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவில், 0.458 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் 0.500 மில்லியன் கன அடி கொள்ளளவில் 0.430 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது.
மழை அளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை காலை வரையில் பதிவான மழையளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:
ஊத்துக்கோட்டை-117, திருவாலங்காடு-112, ஆவடி-117, கும்மிடிப்பூண்டி-89, பொன்னேரி-76, பூண்டி-72, பள்ளிப்பட்டு-65, திருவள்ளூர்-62, ஜமீன்கொரட்டூர்-60, தாமரைபாக்கம்-58, செங்குன்றம்-55, சோழவரம்-54, திருத்தணி, பூந்தமல்லி-தலா 53, ஆர்.கே.பேட்டை-42.20 என மொத்தம் 1,135 மி.மீட்டர், சராசரியாக 75.68 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: பண்ருட்டியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை! சென்னையில் எவ்வளவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.