ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தென்காசியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1020 கோடி செலவிலான 117 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,44,469 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
"தூறலும் சாரலும் கொண்டு மக்களைக் குளிர்விக்கும் மண் தென்காசி. வடக்கே காசி என்றால் தெற்கே தென்காசி. தென்காசி கோயில் குடமுழுக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசில்தான் நடைபெற்றுள்ளது.
நம் ஆட்சியில் வேளாண்மை உற்பத்தி அதிகரித்துள்ளது. நெல் கொள்முதல் மற்றும் அதற்கான கிடங்குகளும் அதிகரித்துள்ளன.
முந்தைய ஆட்சியில் நெல் மிகவும் குறைவாகவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படைகூட தெரியாமல் பேசி வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பொய்யையும் துரோகத்தையும் தவிர அவரிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவருடைய வரலாறே அதுதான்.
தமிழகத்திற்குத் தர வேண்டிய ரூ. 37,000 கோடி நிதியை மத்திய பாஜக அரசு கொடுக்க மறுக்கிறது. கொடுத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துவிடும் என்பதால்தான். ஆனாலும் திமுக அரசு மக்களைக் காக்கும். அவர்கள் எந்த தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' மூலமாக நமது வாக்குரிமையைப் பறிக்கும் சதியை அறிவித்திருக்கிறார்கள்.
பிகாரில் என்ன நடந்தது என்று பார்த்தோம். பாஜகவுக்கு தோல்வி உறுதியானால் வாக்காளர்களை நீக்க துணிந்தார்கள். தமிழ்நாட்டிலும் இதைச் செய்ய பார்க்கிறார்கள்.தொடக்கம் முதலே இதனை எதிர்த்து வருகிறோம். இதில் கேரளமும் நம்முடன் இணைந்துள்ளது.
இதுதொடர்பாக நவ. 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவிருக்கிறது. ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான். அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். வாக்குத் திருட்டு போன்ற பாஜகவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம். அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு இதில் பங்கேற்க வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிக்க | அமேசான் பணி நீக்கம்: இந்தியாவில் 1,000 பேர் வேலை இழக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.