பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!
பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியுள்ளது குறித்து...
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். இதுகுறித்து டிசம்பா் 6-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் புதன்கிழமை இரவு டிடிவி.தினகரன் கலந்து கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: துரோகத்தின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி கட்சித் தொண்டா்களின் எண்ணத்தை சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறாா். எங்கு சென்றாலும் தன்னை முதல்வராக கூறிக் கொள்கிறாா். அவரது அகங்கார ஆணவப் பேச்சு முறியடிக்கப்பட வேண்டும். அதிமுகவை ஒன்றிணைப்பதான முயற்சிகளை மத்திய அமைச்சா் அமித்ஷா மேற்கொண்டாா். ஆனால் அவரது முயற்சிகள் எடுபடவில்லை.
Advertisement
Advertisement
புதுதில்லியில் உள்ள அமித்ஷாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. நல்ல முதலமைச்சரை தோ்ந்தெடுப்பதற்காக டிசம்பா் 6-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டா்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும் . அதாவது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் டிசம்பா் 6ம் தேதி அதுபற்றி முறைப்படி அறிவிப்போம்.
விஜய் அரசியல்:
தவெக மூலம் நடிகா் விஜய் அரசியலுக்கு வந்துள்ளாா். அவரது வருகை, விஜய்காந்த் அரசியலுக்கு வந்தது போல் இருக்கும். விஜய் வருகை திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா் டிடிவி.தினகரன்.
தில்லியில், தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் கூடியுள்ள நிலையில், டிடிவி தினகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பாஜகவின் தே.ஜ.கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகினார்.
இதனைத் தொடர்ந்து, அமமுக நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவ்வாறு, நடைபெற்றால் தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை அது உருவாக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி
It has been reported that AMMK General Secretary TTV Dhinakaran has withdrawn from the BJP alliance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.