திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.
நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (வயது19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு நெல்லை ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெங்கடேஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர்.
உடனடியாக அப்பகுதியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் தலைமையிலான காவலர்கள் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும், கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கொலையான வெங்கடேஷ் உடன் வந்த நண்பர்கள் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்ற நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான வழக்கு வெங்கடேஷ் மீது இருப்பது தெரிய வந்துள்ள.
மேலும், இந்த கொலை சம்பவம் சக்தி மீதான தாக்குதலுக்கு பழி வாங்குவதற்காக நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்த நெல்லை ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.