இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்
கரூர் பலி சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தியாளர்களுடன் பேசுகையில் ``தவெக தலைவர் பிரசாரத்தின்போது, ஆம்புலன்ஸ் வருகிறது. அதில் ஆளில்லை; அது எங்கிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை.
நாமக்கல்லில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் கூட்டி வந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் வந்த 2 ஆம்புலன்ஸ், எப்படி உள்ளே வந்தது? சம்பவத்துக்கு முன்னர் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்பதுதான் எங்கள் கேள்வி.
அவர் பேசத் தொடங்கியவுடன் லைட் அணைகிறது, போலீஸ் தடியடி நடத்துகின்றனர், செருப்பு வீசுகிறார்கள், ஆம்புலன்ஸ் வருகிறது - இவையெல்லாம் பார்த்தால் சந்தேகம் இருப்பதாக சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்கின்றனர், 40 ஆம்புலன்ஸ்களை ஸ்டிக்கர் ஒட்டி தயாராக வைத்திருக்கின்றனர், இரவோடு இரவாக முதல்வர் வருகிறார், நிவாரணத் தொகை அறிவிப்பு, தனிநபர் ஆணையம் அறிவிப்பு - இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்கின்றனர். இதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறது; முதல்வர் இருக்கிறார்.
இதே, கள்ளக்குறிச்சியில் 68 பேர் இறந்தபோது, முதல்வர் எங்கே போனார்? ஏன் அவர்களைப் பார்க்கவில்லை; ஆறுதல் சொல்லவில்லை. சென்னை மெரீனாவில் ஏர் ஷோ நெரிசலில் 5 பேர் இறந்தார்கள். அவர்களை ஏன் பார்க்கவில்லை? ஆறுதல் சொல்லவில்லை?
அப்படியென்றால், இரவோடு இரவாக நடப்பவற்றைப் பார்த்தால் சந்தேகம் வருகிறது என்று சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.
ஒரு நபர் ஆணையம் விசாரிக்கச் சென்றபோது, பின்னால் இருந்துகொண்டு மிரட்டுகின்றனர். பேசக் கூடாது; வாயை மூடு என்று கையைக் காட்டுகின்றனர். இப்படியிருக்கையில் எப்படி நியாமமான விசாரணை நடக்கும்? அவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது