விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி...
தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 22 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக நாளை (புதன்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான், மாநகர பகுதியில் உள்ள ராஜகோபாலபுரம் ஆகிய இரண்டு இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்,
Advertisement
"சென்னை தவிர மற்ற இடங்களில் விஜய்யின் பிரசாரம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய தடைகள் உள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிரசாரம் செய்து வருகிறோம்.
நெல்லையில் விஜய் பிரசாரம் செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும். விஜய் பரப்புரைக்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகிறது.
234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. புதிய மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். திரைத்துறையை விட்டு மக்களுக்காக அரசியலுக்கு. வந்திருக்கிறார். விஜய் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை" என்று பேசினார்.