ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்புகள் நிறுத்தம்!
ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது பற்றி...
ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ., பி.எட். படிப்புகள் 2026- 27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மாணவர்கள் சேர்க்கை மேற்கொண்டால் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்றும் எந்தவொரு கல்வி நிறுவனமும் இந்த படிப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
Advertisement
"தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் கடந்த 12.09.2025 அன்று இதுபற்றிய பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய ஆசிரியர் கல்வி மன்றம் - திருத்த ஒழுங்குமுறை விதிகள் 2014 -ன்படி 25.01.2024 படியும், 03.07.2025 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் மூலம் மேலும் திருத்தப்பட்டபடியும், ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ., பி.எட். (B.Sc., B.Ed & B.A., B.Ed) பட்டப்படிப்புகள் 2026 - 2027ஆம் கல்வியாண்டிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும் மேலும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ., பி.எட். பட்டப்படிப்புகள் நடத்தும் எந்தவொரு கல்வி நிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 12.09.2025 அன்று பொது அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.. பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் இப்பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது எனத் தெரிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.