செய்தியாளர்களை விஜய் சந்தித்தாலே அதுவே பெரிய சாதனை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகு கூட இதுவரைக்கும் 30 சதவீத வாடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.
திட்டம் தொடங்கியும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக, அதிமுக ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. திமுக அரசைவிட பன்மடங்கு சிறந்த நிர்வாகி எடப்பாடி பழனிசாமி. கருத்துக்கணிப்பை பார்க்கும்போது முதல்வருக்கு பயம் வந்துவிட்டது.
முதல்வர் திமுக தோழமைக் கட்சிகளை அடிமையாக வைத்திருக்கிறார். திமுக கூட்டணி வைத்தால் நட்பு ரீதியில் நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமை ரீதியாகவா? அவர்கள் கூட்டணிக்குள் கொள்கை முரண்பாடு உள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது முதல்வருக்கு பதற்றம் வந்துவிட்டது.
பட்ஜெட் - சிலருக்கு கசக்கும், சிலருக்கு புளிக்கும், சிலருக்கு இனிக்கும். ஒன்பதாவது முறையாக பெண் பட்ஜெட்டை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. கைத்தறி ஆடையை உடுத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். எங்கள் ஆட்சிக் காலத்தில் 17 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். எய்ம்ஸ் முதல் கட்டடம் திறக்கப்பட உள்ளது.
செங்கோட்டையன் செல்லாக்காசு. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் அங்கு சென்றுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடும்போது செங்கோட்டையன் எங்களுடன் தான் இருந்தார். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.