முகப்பு
தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடம் தரக் கூடாது: கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடம் தரக் கூடாது என்று திமுக ஐடி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:58 PM
முதல்வர் ஸ்டாலின். - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:17 PM

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடம் தரக் கூடாது என்று திமுக ஐடி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், நாம் செய்தது மக்களுக்கு தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! அதனால், என்னுடைய பேஜை ஃபாலோ செய்வது போன்றே, முதலமைச்சர் அலுவலகப் பக்கம், நம்முடைய கட்சியின் பக்கங்கள், அரசு செய்தித் துறையின் பக்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள். நம்முடைய ஐ.டி.விங்-கின் வாட்ஸ்அப் சேனலை மற்றவர்களை ஃபாலோ செய்ய வையுங்கள். ஏன் என்றால், சாதனைகளையே ஈசியாகச் செய்யும் நாம், அதை மக்களிடம் கொண்டு செல்வதில் மெத்தனமாக இருக்கக் கூடாது! அனைத்து ஊரிலும் தினமும், தி.மு.க.வின் செயல்பாடுகள், திட்டங்கள், சாதனைகள்தான் பேசுபொருளாக இருக்க வேண்டும்! தேர்தல் வரைக்கும் இடைவெளியே விடாதீர்கள்!

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:51 PM

அதேபோன்று, இன்றைக்கு நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய முதல் விஷயமே ‘ஃபேக் நியூஸ்’தான். தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ண வேண்டும். அந்தக் கலவரத் தீயில் குளிர் காய வேண்டும் என்று எதிரிகள் நினைக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் டிசைன் டிசைனாக பொய்ச் செய்திகளைப் பரப்பிப் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் பிளான் எல்லாம் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கிறார்கள். இந்த பொய்ச் செய்திகள் எனும் சவால்களை நாம் முறியடித்தாக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் மிக விழிப்புடன் ஆன்லைனில் செயலாற்ற வேண்டும்.

Advertisement

பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கென்றே, நிறைய ‘ரைட் விங்’ அக்கவுண்ட்களை பா.ஜ.க. நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதில் பாதி அதிகாரப்பூர்வ பக்கங்கள், மீதியெல்லாம் மீம்ஸ் பேஜ் போன்று இருக்கும் பக்கங்கள். இவ்வாறு எதுவாக இருந்தாலும், நம்மைப் பற்றி ஒரு பொய்ச் செய்தி பரப்புகிறார்கள் என்றால், உடனே ஆதாரத்துடன் கமெண்ட்ஸ், ரிப்ளைஸ்-இல் நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அந்தப் பொய்ச் செய்தியைப் படிப்பவர்களில் பாதி பேர் நம்முடைய விளக்கத்தைப் படித்தால் கூட அது உங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்! இதை ஒருவர் செய்தால் போதாது! ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்! அப்போதுதான் பொய்ச் செய்தி பரப்புபவர்களுக்கு பயம் இருக்கும்! நம்முடைய ஆட்கள் நூற்றுக்கணக்கில் போடும் ரிப்ளையில் அவர்கள் அந்தப் பொய்ச் செய்தியையே டெலிட் செய்துவிட்டு ஓட வேண்டும்!

இப்போது கூட தில்லியில் ஒன்றிய அரசு நடத்தும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி, அமைச்சர்கள் உட்பட பல பா.ஜ.க.வினர் போலியான பெருமைகளை ஷேர் செய்து கொண்டு இருந்தார்கள். மொத்தப் பேரும் சேர்ந்து அம்பலப்படுத்தியதும் அந்த ட்வீட்டை எல்லாம் அமைச்சரே டெலிட் செய்துவிட்டார்! அனைவரும் சேர்ந்து உண்மையைப் பேசினால் இதுதான் அவர்களின் நிலைமை! ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டும்!

நம்மைச் சீண்டிப் பார்ப்பது போன்று நிறைய பதிவுகளைப் போடுவார்கள். ஆனால், நாம் அதை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்! காமெடியாக பதிலடி கொடுங்கள்! கிண்டலாகப் பேசுங்கள்! ஆனால், எதுவாக இருந்தாலும் பொறுமையாக, கூலாக டீல் செய்யுங்கள்.

“அவர்களுக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்தால் தக்காளி சட்னி” என்ற நினைப்பில்தான் செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும்கூட செயல்படுகிறது. அதனால், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும், உருவாக்கும் ஒவ்வொரு கன்டென்டையும் பொறுப்புடன் உருவாக்குங்கள். நம்முடைய எதிரிகளுக்கு இருக்கும் ஊடக சொகுசு நமக்கு என்றைக்குமே இருந்தது கிடையாது. அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தோழமைச் சக்திகளுடன் சிண்டு முடியும் வேலைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக் கூடாது! கட்சியில் இருந்து வரும் அஃபிசியல் செய்திகளை மட்டும் நம்பிச் செயல்படுங்கள். இஷ்டத்திற்குப் பரப்பப்படும் புரளிகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:51 PM

களம் நமக்குச் சாதகமாக இருக்கிறது. வெற்றி பெறுபவர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். களத்திலும், ஆன்லைனிலும் நாம் சரியாகச் செயல்பட்டோம் என்றால் நம்முடைய டார்கெட்டை நாம் நிச்சயம் அச்சீவ் செய்துவிடுவோம். அதற்கு அடித்தளமாகத்தான் இன்றைக்கு ‘ஆடுகளம்’ செயலியை லான்ச் செய்திருக்கிறோம்.

2019-இல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த அனைத்துத் தேர்தலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்! தி.மு.க. கூட்டணிதான் வெல்லும் என்று தெரிந்தே நடந்த தேர்தல்கள்தான் அனைத்தும்! ஆனால், எப்படிப்பட்ட மார்ஜினில் வெற்றி பெறுவோம்! எவ்வளவு வாக்கு வித்தியாசம்! இந்த முடிவுகளுக்காகத்தான் நாம் காத்திருப்போம்! 2026 தேர்தலும் அதே போன்றுதான்! தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று! ஆனால், அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்பதை நோக்கித்தான் நாம் அனைவரும் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்!

கட்சியில் உறுப்பினராக, நிர்வாகியாக இருந்து உழைக்கும் செயல்வீரர்கள் அனைத்து கட்சியிலும் இருப்பார்கள். ஆனால், அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல், கொள்கைக்காக இணையத்தில் களமாடும் தொண்டர்கள் தி.மு.க.விற்கு மட்டும்தான் உண்டு! இதை நீங்கள் பதவிக்காக செய்யவில்லை! எம்.பி. ஆக வேண்டும் - எம்.எல்.ஏ. ஆக வேண்டும் - கவுன்சிலர் ஆக வேண்டும் என்று செய்யவில்லை.

“இந்த இயக்கத்தால் கல்வியறிவைப் பெற்றவர்கள் நாம், கழகத்தின் திட்டங்களால் உயர்ந்தவர்கள் நாம், கலைஞரால் சமூகநீதிப் பார்வையை கற்றுக்கொண்டவர்கள் நாம், மொத்தத்தில், “திராவிடத்தால் எழுந்தோம்” என்கிற நன்றியுணர்வுடன் எதையும் எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காகக் கழகத்தை ஆதரிப்பவர்கள் நீங்கள்!

இப்படிப்பட்ட தொண்டர்கள் இல்லாத எதிர்க்கட்சிகளால் இந்த உணர்வை, உறவை எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது! நான் உறுதியாகச் சொல்கிறேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்தப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் உங்களை மீண்டும் சந்திப்பேன். ஆஃப்லைன், ஆன்லைன், இரண்டிலும் DMK-தான் ‘லயன்’ என்று காட்டுவோம்! வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

CM M.K. Stalin said at the DMK IT wing administrators’ meeting that no room should be given to the conspiracies of the opposition parties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.