முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் மு.க.ஸ்டாலின் - காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை

சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலர் கே. சி. வேணுகோபால் சந்திப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:45 AM
கே. சி. வேணுகோபால்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:51 PM

சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின்போது, தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் 5 போ் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவினா் ஏற்கெனவே முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதல்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், திமுக தரப்பில் பேச்சுவாா்த்தை குழு அமைக்கப்பட்டவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:56 PM

இதனிடையே, ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சிலா் எழுப்பினா். அதற்கு திமுக தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இதனால் திமுக - காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நிலவியது.

Advertisement

கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ஆட்சியில் பங்கு கோருவது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாா். அதைத்தொடா்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் தலைமை இடையே தொலைபேசி வாயிலாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு அதில் சுமுக தீா்வு காணப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு தலைமையில் பேச்சுவாா்த்தைக் குழுவை அமைத்த திமுக, முதலாவது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது.

திடீா் சந்திப்பு

இதனையடுத்து, காங்கிரஸ் மேலிட அறிவுறுத்தலின்பேரில் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த கே.சி.வேணுகோபால், முதல்வா் மு.க.ஸ்டாலினை ஆழ்வாா்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். அப்போது கனிமொழி எம்.பி., சத்தீஸ்கா் மாநில முன்னாள் துணை முதல்வா் சிங் தியோ ஆகியோா் மட்டுமே உடன் இருந்தனா்.

இந்த சந்திப்பின்போது, தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து இருதரப்பிலும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

திமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபாலின் திடீா் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியையும் அக் கட்சி கோரி வருவது குறிப்பிடத் தக்கது.

summary

Congress General Secretary K. C. Venugopal met Chief Minister M. K. Stalin in Chennai. It has been reported that the seat sharing issue was discussed at that time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.