எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகுத்துறையில், வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்கும் பருவம் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பொண்ணுகுட்டி, ரீகன், குமார், அன்புராஜ், கௌசிக் ஆகிய 5 பேரும் கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் .
கோடிக்கரைக்கு தென்கிழக்கே சனிக்கிழமை காலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக பைபர் படகையும் 5 மீனவர்களையும் சிறைப்பிடித்து சென்றுள்ளனர்.
இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகையும் சிறைப்பிடித்து, அதில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவதும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை மீனவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.