அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்
மொழிப்போர்த் தியாகிகள் நாளில் முதல்வர் ஸ்டாலினின் பதிவு.
அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று(ஜன. 25) மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.