சாத்தூரில் போட்டி! நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
தேர்தலில் போட்டியிடுவது குறித்து நயினார் நாகேந்திரன் அறிவிப்பு...
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் 23 அன்று கையொப்பமானது.
தொடர்ந்து மார்ச் 27 புதன்கிழமை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, மயிலாப்பூர், ராசிபுரம் (தனி), மொடக்குறிச்சி, தளி, ராமநாதபுரம், மானாமதுரை (தனி), உதகை, குளச்சல், அவினாசி, பத்மநாபபுரம், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர் (மதுரை மாவட்டம்), மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்(தனி), ராதாபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதை நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளார்.
குமரியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நான் சாத்தூரில் போட்டியிடுகிறேன். அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.