முதல்வர் ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண அட்டவணை!
திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசார அட்டவணை வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் ஸ்டாலினி தேர்தல் பிரசார அட்டவணை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்திலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயண அட்டவணை வெளியாகியுள்ளது.
அறிவிக்கையின்படி, பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, முதற்கட்டமாக பிரசாரத்தை, மார்ச் 31 ஆம் தேதியில் திருவாரூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார்.
திருவாரூரில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் விதமாக, மார்ச் 31-ல் தெற்கு ரத வீதியில் மாலை 5 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
திருச்சியில் மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் வகையில், திருச்சி உழவர் சந்தையில் ஏப்ரல் முதல் தேதியில் காலை 9 மணியளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதே நாளில், கரூரில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக, கரூர் ராயனூர் தொகுதியில் மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு கிழக்கு, பவானி தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் விதமாக, ஏப்ரல் 2 ஆம் தேதியில் ஈரோடு சித்தோடு பகுதியில் காலை 9 மணியளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், அதே நாளில் கோவை மாவட்டத்தின் வடக்கு, தெற்கு, சூலூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் வகையில், கோவை கொடிசியா திடலில் மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.