தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜ. கூட்டணி : மு.க. ஸ்டாலின்
தோல்வி அடைவதற்காகவே தமிழ்நாட்டிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்...
தோல்வி அடைவதற்காகவே தமிழ்நாட்டிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 31) தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருவாரூரில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் திருவாரூருக்கு செய்யப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் ஆழித் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஆழித் தேரோட்டம் நடக்கக் காரணமாக இருந்தவர் கருணாநிதி.
பாஜக அரசாங்கத்தால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி இல்லை. மதுரை எய்ம்ஸ் நிலைமை என்னவென்று அனைவருக்குமே தெரியும்.
ஹிந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், நம் வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக் கூட பாஜக இன்னும் தரவில்லை.
போதிய நிதியை ஒதுக்கவில்லை என்றாலும், திறமையான நிர்வாகத்தால் முதன்மை மாநிலமாக உயர்ந்துள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும். அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி.
வஞ்சகத் திட்டம் தீட்டுபவர்களிடம் தமிழ்நாட்டைக் கொடுக்கலாமா?. தோற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது தேஜ கூட்டணி. தமிழ் நாடு அணியா? தில்லி அணியா? என்பதுதான் இந்த தேர்தலில் உள்ள போட்டி.
நாம் போராடுவது திமுக வெற்றிக்காக மட்டும் அல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கான வெற்றிக்கு மட்டும் அல்ல, இது தமிழ்நாட்டிற்கான வெற்றி. அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதவு கொடுக்க வேண்டும்.
எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம். ஏப்ரல் 23ஆம் தேதி சிந்திக்க வேண்டியது ஒன்றுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சந்தர்ப்பவாதமா? திராவிட மாடல் திட்டங்களா? என்பதுதான் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.