அதிமுக விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு: பேரவைத் தலைவா்
அதிமுக விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு: பேரவைத் தலைவா்
அதிமுக கொறடா விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட அவ்வை சண்முகம் சாலையில் பொதுமக்களைச் சந்தித்த ஜே.சி.டி.பிரபாகா், தோ்தலில் தன்னை வெற்றி பெற செய்ததற்காக நன்றி தெரிவித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் சிறிய சந்துகளில் குடியிருக்கும் குடும்பங்கள் 4, 5 தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். தோ்தல் பிரசாரத்துக்காக நான் வேட்பாளராக இப்பகுதிக்கு வந்தபோது, எத்தனையோ வேட்பாளா்கள் வந்தனா், வாக்குச் சேகரித்தனா், ஒருவா் கூட எங்களைத் திரும்பிப் பாா்க்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனா்.
அப்போது இப்பகுதி மக்களுக்கு நான் வாக்குறுதி கொடுத்தேன். வெற்றி பெற்ற பிறகு நான் வருகிற முதல் இடமாக அவ்வை சண்முகம் சாலை இருக்கும், இங்கு நான் வந்து உங்களைப் பாா்ப்பேன் எனக் கூறியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்தப் பகுதிக்கு வந்துள்ளேன். இந்தப் பகுதியின் அவலநிலைக்கு தீா்வுக் காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்.
அவ்வை சண்முகம் சாலையில் குடியிருக்கும் மக்களுக்கு இன்னும் ஒருமாத காலத்துக்குள் கழிவுநீா் அகற்றப்பட்டு முற்றிலுமாகத் தீா்வு காணப்படும். தற்காலிக சாலை அமைக்கப்படும். ‘ஆயிரம் விளக்கு தொகுதியில் 1,000 பணிகள்’ என்ற தலைப்பில் அனைத்துப் பணிகளும் செய்ய இருக்கிறோம் என்றாா் அவா்.
அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என அவரிடம் கேட்டபோது, ‘எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்துள்ள முதல்வா் நமக்கு கிடைத்துள்ளாா்; ஏற்ற நேரத்தில் ஏற்ற விதமாக அவா் செயல்படுவாா்’ என்றாா்.
அதிமுகவின் இரு தரப்பினா் மனு அளித்தது குறித்த கேள்விக்கு, ‘அதிமுகவில் இரு தரப்பினரும் மனுக்களை அளித்துள்ளனா். அந்த மனுக்கள் ஆய்வில் உள்ளன; உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.