பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறைகள் யார் எவருக்கு?
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறைகள் யார் எவருக்கு ஒதுக்கப்படவுள்ளது குறித்து...
தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், யார் எவருக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
முதல்வராக விஜய் பதவியேற்று ஒருவாரத்துக்கு பிறகு 9 தவெக அமைச்சர்களுக்கு கடந்த சனிக்கிழமை (மே 16) துறைகள் ஒதுக்கப்பட்டன.
எனினும், வேளாண், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், இந்து சமய அறநிலையத் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) காலை நடைபெற்றது.
பதவியேற்பு விழாவில், வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார், கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார், அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது ஃபர்வாஸ், தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார், ராதாகிருஷ்ணன் நகர் எம்.எல்.ஏ. மேரி வில்சன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு, ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. மதன் ராஜா. பி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி. கே, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. எம். விஜய் பாலாஜி, ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ் செல்வன், சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், அவிநாசி எம்.எல்.ஏ. எஸ். கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. சி. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ஆர்.வி. ரஞ்சித்குமார், கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத், திருவாடானை எம்.எல்.ஏ. ராஜீவ், கடலூர் எம்.எல்.ஏ.பி. ராஜ்குமார், அரக்கோணம் எம்.எல்.ஏ. வி. காந்திராஜ் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்லேகர் அடுத்தடுத்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோரும் அமைச்சா்களாகப் பதவியேற்றனர்.
ஏற்கனெவே இருந்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டு, புதிய அமைச்சர்களுக்குத் தனித்தனியே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், சிறுபான்மையினர் நலத் துறை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.