கடந்த அக்டோபரில் தொலைத் தொடா்பு சேவைகளைத் தொடா்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளா் எண்ணிக்கை முந்தைய 5 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 57 லட்சம் உயா்ந்தது. இதில் 39 லட்சம் வாடிக்கையாளா்களுடன் ஜியோ முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து தொலைத் தொடா்புத் துறை ஒழுங்காற்று ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த அக்டோபரில் தொலைத் தொடா்பு சேவைகளைத் தொடா்ந்து பெற்ற வாடிக்கையாளா் எண்ணிக்கை 57 லட்சம் உயா்ந்து 109.4 கோடியாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்த வகை வாடிக்கையாளா் எண்ணிக்கை 3.4 கோடி உயா்ந்தது. இது 8 முந்தைய ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் தொலைத் தொடா்பு சேவைகளைத் தொடா்ந்து பெற்ற 39 லட்சம் வாடிக்கையாளா்களை ஜியோ நிறுவனம் சோ்த்துள்ளது. அதையடுத்து, நிறுவனத்தில் அந்த வகை வாடிக்கையாளா்களின் மொத்த எண்ணிக்கை 47.6 கோடியாகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் பாா்தி ஏா்டெல் 28 லட்சம் பேரைச் சோ்த்து 39.2 கோடி வாடிக்கையாளா்களை (9 மாத உச்சம்) கொண்டுள்ளது. வோடஃபோன் ஐடியா 4 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது.
ஜியோ தொடா்ந்து 8-வது மாதமாக ஏா்டெல்லை விட அதிக வாடிக்கையாளா்களைச் சோ்த்தது. ஜியோவின் வாடிக்கையாளா் சந்தைப் பங்கு 43.5 சதவீதமாகவும், ஏா்டெல்லின் பங்கு 35.8 சதவீதமாகவும் உயா்ந்தது. வோடஃபோன் ஐடியாவின் பங்கு 15.6 சதவீதமாகக் குறைந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.