சுற்றுலா

உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்

உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல் தலம்.

தினமணி

உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல் தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது.

இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில் இந்தச் சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை உலகுக்கு உணர்த்துகிறது.

இங்குள்ள குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடமாகும் இது. இந்த இயற்கை குகையில் வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் கூடிய 17 கற்படுக்கைகளைக் காணலாம். இதில் மிகப்பெரிய, பழமையான படுக்கையில், தமிழ் கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் இருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள 7 படிக்கட்டுகளைக் கடந்து குகையினுள் நுழைவதால் இந்த இடம் ஏழடிப்பட்டம் என அழைக்கப்படுகிறது.

ஆனால், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணாநோன்பிருந்து, உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனவும் பெயர் பெற்றதாக மற்றொரு செய்தி கூறுகிறது. குகைக் கோயிலில் 160 சதுர அடி அளவுள்ள முக மண்டபமும், அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய கருவறையும் உள்ளன.

முன்மண்டபத்தின் முகப்பில் 2 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவரில் சமண ஆசிரியரின் சிற்பம், தெற்கில் 5 தலைபாம்புடன் கூடிய 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்களும் உள்ளன.

குகைக் கோயிலின் தரை நீங்கலாக, மற்ற பகுதிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் Fresco-Secco முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொலிந்து, சமப்படுத்தி, சுண்ணாம்புச் சாந்து பூசி அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாகத் தேய்த்து அப்பரப்பில் ரேகைகளும், வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் சமீபகாலத்தில் உண்டான இந்த முறை வண்ணங்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஓவியக் கலையின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.

முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அனைவரின் சிந்தையையும் கவரும். சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான். மணிமேகலை கூறும் வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத் தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன், தாமரையும், அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக்குலுங்குகின்றன. பலவிதமான மீன்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன.

அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றமுடைய ஓவியங்கள் இயல்பாக உள்ளன.

மேலும், அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும், அமைதியையும் பண்பட்ட கலைத் திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காண முடியும். இந்திய ஓவியக்கலை பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கை சித்தன்னவாசல் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள ஓவியங்களைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, நெடுநல்வாடை என பல சங்க நூல்கள் எண்ணற்ற தகவல்களை தருகின்றன.

இத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஓவியங்களை அல்ல அல்ல உயிர் நாடிகளை எவ்வாறுதான் வரைந்திருப்பார்களோ என்று எண்ணும் போது நமக்கு வியப்புத்தான் ஏற்படுகிறது.

சில ஓவியங்கள் சிதிலமடைந்து விட்ட நிலையில் இருந்தாலும், அதன் அழகில் எந்த மாறுபாடோ, குறைபோடோ ஏற்படவில்லை.

கால மாறுபாடுகளால் பல ஓவியங்கள் முற்றிலும் சிதைந்து விட்ட போதிலும், எஞ்சியிருக்கும் ஓவியங்கள் தான், அக்காலத்தில் தமிழகத்தின் ஓவியக் கலை மற்றும் நாட்டியக் கலைக்கு நமக்கும், எதிர்கால சந்ததியருக்கும் சான்றாக அமைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு...

இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்க பயணியர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. உணவு வசதி இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலோ அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டையிலோ தங்கலாம். புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் அனைத்து பஸ்களும் இந்த ஊர் வழியாகச் செல்லும்.ஆனால், சுற்றுலாத் தலம் பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளதால், பஸ்ஸில் செல்வோர் நடந்து செல்ல வேண்டும். இதன்காரணமாக, புதுக்கோட்டையில் இருந்து வாடகை கார் எடுத்துக் கொண்டும் சென்று வரலாம்.

தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க முடியும். இவ்விடத்தில்  தற்போது காதலர்கள் ஆக்ரமித்து பல்வேறு இடைஞ்சல்கள் தருவதால், பல முக்கியப் பகுதிகளில் அவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலை தொல்லியல் துறைக்கு ஏற்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களை புகைப்படம் எடுக்க தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. மிக முக்கியமான கல்லறைகளில், காதலர்கள் தங்கள் கை வேலையை காட்டி விட்டிருப்பதால் அப்பகுதிகளை இரும்பு வேலி போட்டு மூடியுள்ளது தொல்லியல் துறை. எனவே, இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து வியந்து அதன் தோற்றத்தில் எவ்வித மாறுபாட்டையும் ஏற்படுத்தாமல் அதனை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்க உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT