பகுதி 1. சிவபுராணம்-6
தோன்றுதல், மறைதல், அதனால் ஏற்படும் தொடர்புகள் (உறவுகள்) என எவையும் இல்லாத புண்ணியனே,
6
பாடலின்பம்
நோக்க அரிய நோக்கே, நுணுக்க அரிய நுண் உணர்வே,
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே,
காக்கும் எம் காவலனே, காண்பு அரிய பெரு ஒளியே,
ஆற்று இன்ப வெள்ளமே, அத்தா, மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய், சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே, என் சிந்தனையுள்
ஊற்றான உண் ஆர் அமுதே, உடையானே,
பொருளின்பம்
காண அரிய காட்சியே, நுட்பமாய் உணர அரிய நுட்ப உணர்வே,
தோன்றுதல், மறைதல், அதனால் ஏற்படும் தொடர்புகள் (உறவுகள்) என எவையும் இல்லாத புண்ணியனே,
எங்களைக் காக்கும் காவலனே,
காண்பதற்கு அரிதான பெரிய ஒளியே,
இன்ப ஆற்றின் வெள்ளமே,
எங்கள் தந்தையே,
உயர்வாக நிற்கும் ஒளிச்சுடராக, சொல்லால் விவரிக்க இயலாத நுட்பமான உணர்வாக மாறுகின்ற இந்த உலகத்திலே பல வடிவங்களாக வருகிறாய், ஞானிகளால் உணரக்கூடியவனே, தெளிவுகளுக்குள் மிகத் தெளிவாகி நிற்பவனே,
என் சிந்தனையில் ஊறி நிற்கின்ற உண்பதற்கு இனிய அமுதமே, என்னை அடிமையாகக் கொண்டவனே,
சொல்லின்பம்
நோக்கு: பார்வை
நுணுக்கு: நுட்பம்
போக்கு: செல்லுதல்
புணர்வு: தொடர்பு/ உறவு
அத்தா: தந்தையே
மிக்காய்: மிகுதியாக/ அதிகமாக
தேற்றம்: தெளிவு
உடையான்: உடையவன்