பகுதி 1. சிவபுராணம்-7
நள்ளிருளில் நடனத்தைச் சிறப்பாகப் பயின்று ஆடும் நாதனே,
7
பாடலின்பம்
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே,
தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே,
அல்லல் பிறவி அறுப்பானே, ‘ஓ’ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர், சிவபுரத்தின் உள்ளார், சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
பொருளின்பம்
நள்ளிருளில் நடனத்தைச் சிறப்பாகப் பயின்று ஆடும் நாதனே,
தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தாடுபவனே,
தென்பாண்டி நாட்டை உடையவனே,
துன்பம் தரும் பிறவியை அறுப்பவனே,
‘ஓ’ என்று கூக்குரலிட்டு, சொல்லுவதற்கு அரிய சிவபெருமானின் புகழைச் சொல்லி, அவனுடைய திருவடிகளில் இந்தச் சிவபுராணம் சாற்றப்படுகிறது,
இதன் பொருளை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரம் செல்வார்கள், பலரும் அவர்களைப் போற்றுவார்கள், சிவபெருமானின் திருவடிகளில் பணிந்து அவர்கள் சிறப்பார்கள்!
சொல்லின்பம்
நட்டம்: நடனம்
அல்லல்: துன்பம்
ஏத்த: பாராட்ட/ போற்ற