முகப்பு
தினமணி கதிர்

நற்றமிழ் நாவரசி..

'கதை சொல்லி திருக்குறள்', 'பொன்னியின் செல்வன்', சிவகாமியின் சபதம்' ஆகியவற்றை ஒன்பதாம் வகுப்பு மாணவி தீஷா, தனது யுடியூப் சானல், முகநூல் கணக்குகளின் வழியே பரப்பிவருகிறார்.

Updated On : 3 ஆகஸ்ட் 2025, 12:08 am IST
மாணவி தீஷா
பகிர்:

'கதை சொல்லி திருக்குறள்', 'பொன்னியின் செல்வன்', சிவகாமியின் சபதம்' ஆகியவற்றை ஒன்பதாம் வகுப்பு மாணவி தீஷா, தனது யுடியூப் சானல், முகநூல் கணக்குகளின் வழியே பரப்பிவருகிறார். அவர் இதுவரை 350 பதிவுகளைப் பதிந்துள்ளார்.

'அன்புச் சொந்தங்களுக்கு வணக்கம்' எனத் தொடங்கும் தீஷா, தேர்ந்த பேச்சாளரைப் போல, கொஞ்சமும் தடங்கலின்றி தனது பேச்சைப் பதிவு செய்கிறார். அருமையான தமிழ் உச்சரிப்பும், கதை என்று சொன்னாலும் பயன்தரும் உருப்படியான கதையைத் தரமாகச் சொல்வதும் தீஷாவின் பலம்.

கம்பக்குடியைச் சேர்ந்த திரவியராஜ்- மீனா தம்பதியின் மகள் அவர். திரவியராஜ் பிளஸ் 2 வரையும், மீனா இளங்கலை வரலாறும் படித்தவர்கள். மூன்றாம் வகுப்பு படித்தபோதே பள்ளிப் பேச்சுப் போட்டியில் களமிறங்கிய தீஷா, ஆறாம் வகுப்பு படிக்குமபோது, பொன்னியன் செல்வனைப் பற்றி குறைந்தது ஐந்து மணி நேரம் விவரிக்கும் திறன் பெற்றவர்.

Advertisement

Advertisement

தற்போது புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள அரசு மாதிரிப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி தீஷா, கடந்த சில மாதங்களில் மட்டும் விடுதியில் தங்கிப் படித்துவருகிறார். இவர் தினமும் சமூக ஊடகங்களில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும் வாரம்தோறும் அவருக்கென நிகழ்ச்சி நிரல் உண்டு.

தீஷாவின் தந்தை திரவியராஜ் கூறியது:

'திங்கள்கிழமைகளில் சிவகாமியின் சபதம், செவ்வாய்க்கிழமைகளில் கருத்துகளுடன் கூடிய குட்டிக் கதை, புதன்கிழமைகளில் அறிவியல் மாமேதைகள், வியாழக்கிழமைகளில் கதை சொல்லி திருக்குறள் விளக்கமும், வெள்ளிக்கிழமைகளில் ஆன்மிக உரை ஆகியன தீஷாவின் நிகழ்ச்சி நிரல்.

தீஷாவின் மாமாக்கள் சுந்தரராஜ், கார்த்திகேயன், அத்தை செந்தாமரை உள்ளிட்டோர் தேவையான நூல்களை வாங்கிக் கொடுத்து உற்சாகம் கொடுத்துவருகின்றனர். தற்போது விடுதியில் தங்கிப் படிப்பதால் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது மொத்தமாக விடியோ பதிவு செய்து வாரம்தோறும் வெளியிடுகிறோம். அதற்கு முன்பு தவறாமல் தினமும் விடியோ பதிவு வந்துவிடும்' என்கிறார் திரவியராஜ்.

தீஷா கூறியது:

'புதுக்கோட்டையின் அடையாளமாகத் திகழும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயாவிடம் திருக்குறள் பேரவையின் 'நற்றமிழ் நாவரசி' என்ற பட்டத்தைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியான தொடக்கம். திரை இயக்குநர் பாக்கியராஜிடம் 'சிகரம்' விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். விடுமுறை நாள்களில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசப் போகிறேன்' என்கிறார் தீஷா.

தீஷாவின் யுடியூப் சானல்- ள்ன்ல்ங்ழ் ததஈஙஈ, முகநூல் கணக்கு- திரவிஆம்றஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.