தினமணி கதிர்

நகரும் கோயில்...

பங்குனி, சித்திரை மாதங்களில் பல கோயில்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீதரன்

பங்குனி, சித்திரை மாதங்களில் பல கோயில்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். தேர்த் திருவிழாக்கள் நாட்டில் அமைதியையும் செழிப்பையும் உண்டாக்கும் எனவும் தேரில் இறைவனைத் தரிசித்தால் மறுபிறவி கிடையாது எனவும் ஆகமங்கள் கூறுகின்றன. தேர்த் திருவிழாக்கள் மக்கள் தங்கள் வேற்றுமைகளை மறக்கவும், ஒற்றுமையை வளர்க்கவும் உதவுகின்றன.

மரத்தால் தேர் செய்யப்பட்டாலும் கோயிலுக்கான அனைத்துப் பகுதிகளும் தேரில் உள்ளதால், 'நகரும் கோயில்' என்று குறிப்பிடுவர். தேர் செய்யும் முறை பற்றி மயமதம் - மான சாரம் போன்ற சிற்பநூல்களும், 'குமாரதந்திரம்' என்ற ஆகம நூலும் குறிப்பிடுகின்றன.

கோயில்களில் விழாக்களின்போது மக்கள் இழுக்கும் தேரை 'ரதம்' என்று கூறுவர். ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி உத்தரம் அன்று நம்பெருமாள் உலா வரும் தேர் 'கோரதம்' என அழைக்கப்படுகிறது.

திருநாவுக்கரசர் பெருமான், தமது திருப்பதிகத்தில் கோயில்களின் அமைப்பில் பல வகைகளைக் குறிப்பிடுகிறார். அதில் ஒன்று 'கரக்கோயில்'.

சிதம்பரம் அருகே அமைந்துள்ள மேலக்கடம்பூர் கோயிலின் கருவறை தேர்வடிவில் சக்கரங்களுடன் கலையழகு மிக்க சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது. இக்கோயிலை 'தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்' என்று அப்பர் பெருமான் போற்றுகிறார்.

பிற்கால சோழர் காலத்தில் தேர் போன்று சக்கரங்களுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இந்த மண்டபங்களை 'தேர்க் கோயில்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சிதம்பரம், தாராசுரம், துக்காச்சி, கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில், சாரங்கபாணிகோயில், திரிபுவனம் போன்ற பல கோயில்களில் தேர் போன்ற மண்டபங்களைக் காணலாம். கோயில்களில் காணப்படும் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் தேர் சிறப்பிடம் பெற்றுள்ளன.

தேர்த் திருவிழாக்கள் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மதுரை, திருவையாறு, திருவிடைமருதூர், திருவில்லிப்புத்தூர், திருவண்ணாமலை, எலவானாசூர் போன்ற பல கோயில்களில் நடைபெற தானம் அளிக்கப்பட்ட செய்தியை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மனுநீதி சோழன் ஆண்ட ஊர்

கன்றை இழந்த பசுவின் துயர் தீர்க்கத் தன் அருமை மைந்தனையே தேர்க் காலில் இட்டு நீதியை நிலை நிறுத்திய மாமன்னன் மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர் திருவாரூர். இந்தக் கோயிலில் இரண்டாம் திருச்சுற்றில், மதில் சுவரில் காணப்படும் விக்கிரமச் சோழன் காலக் கல்வெட்டில், மனுநீதி சோழன் வரலாறு குறிப்பிடப்படுகிறது.

கோயிலில் தேர் போன்ற வடிவமாக, மண்டபமாக, சிற்பக்களஞ்சியமாக, கல்லிலே வடித்த காவியமாகத் திகழ்கிறது. நீதிக்கு பெருமை சேர்ந்த இந்த வரலாறு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தூண் ஒன்றிலும், மப்பேடு, செய்யூர் கோயில்களிலும் அழகிய சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

தலச்சிறப்பு

வரலாற்றுச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், வழிபாட்டுச் சிறப்பும் பெற்றதாக திருவாரூர் கோயில் விளங்குகிறது. சைவ சமயத்தில் 'கோயில்' என்றால் சிதம்பரம் கோயிலையும் 'பெரிய கோயில்' என்றால் திருவாரூரையும் குறிக்கும். பஞ்ச பூதத் தலங்களில் பிரிதிவித் (மண்) தலமாக இது விளங்குகிறது. 'பிறக்க முக்தித் தரும் பெருமை' பெற்றது இத்திருத்தலம்.

சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் போற்றிப் பாடியுள்னர். சுந்தரரின் அருள் வாழ்க்கையோடு இணைந்த தலம் இது. சுந்தரருக்காக இறைவனே பரவை நாச்சியாரிடம் தூது போய் நடந்து வந்த திருவடி மணங்கமழும் திருவீதி உடைய திருத்தலம் இது. சேக்கிழாரின் பெரிய புராணத்துக்கு மூல நூலான 'திருத்தொண்டத் தொகையை' இறைவனே அடி எடுத்துக் கொடுத்த சிறப்பு பெற்றது. 'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோருக்கும் அடியேன்' என்று இத்தலத்தைப் போற்றி பாடினார் சுந்தரர்.

சேரமான் பெருமாள் நாயனார், சுழற்சிங்க நாயனார், செருத்துணை நாயனார், சோமாசி மாற நாயனார், தண்டியடிகள் நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நமிநந்தி அடிகள், விறன்மிண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் வரலாற்றுடன் தொடர்பு உடையது இத்தலம். சப்தவிடங்கத் தலங்களில் திருவாரூரும் ஒன்று. ஆரூர் தியாகராஜப்பெருமான் ஆடும் 'அஜபாநடனம்' இத்தலத்தில் சிறப்பானது. அஜபா நடனம் நிகழ்ச்சி நடைபெறும்போதும் 'குடமுழா' என்கிற பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படும் சிறப்பான தலம்.

கர்நாடக இசையை முறையாக வகுத்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் அவதரித்த சிறப்புப் பெற்ற தலமாகவும் ஆரூர் விளங்குகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புடையதால், 'ஸ்ரீபுரம்' எனவும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீவித்யையின் தத்துவத்தை விளக்குவதாக விசேஷ யோக நிலையில் இருந்து கொண்டு கருணை பொழியும் கமலாம்பிகை அம்மன் சந்நிதி சாக்த (சக்தி) வழிபாட்டிற்கு உயர்ந்த தலமாக விளங்குகிறது.

ஆழித்தேர் அழகு

கோயில் தேர் 'ஆழித்தேர்' என அழைக்கப்படுகிறது. திருவாரூர் தியாகேசப்பெருமான் 'ஆழித்தேர் வித்தகர்' என்று அழைத்துப் போற்றப்படுகிறார். 'திருவாரூர் தேர் அழகு' எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.

தேர்த் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருவதை

'ஊழித் தீயன்னானை ஓங்கொலிமாப்பூண்டதோர்

ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே' என்று அப்பர் வாக்கால் அறியலாம். மேலும் 'விண்ணவர் தொழ நின்ற வீதி விடங்கன் திருத்தேர்' என்றும் போற்றப்படுவதையும் காணலாம்.

திருவாரூர்த் தேர் திருவிழா பற்றிய குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலைய மராத்திய ஆவணங்களில் காணப்படுகின்றன. தஞ்சைப் பெரிய கோயில், மன்னார்குடி, திருவலஞ்சுழி, திருவையாறு, திருவிடைமருதூர் போன்ற திருத்தலங்களில் நடைபெற்ற தேர்த்திருவிழாக்கள் பற்றிய செய்திகளை ஆவணங்களில் காணலாம்.

திருவாரூர்த் தேர்த் திருவிழாவில் பங்கேற்று தேர் இழுக்க 5 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டதாக ஒரு மராத்திய ஆவணம் வெளிப்படுத்துகிறது.

ஆழித்தேர் வித்தகன்

திருவீழிமிழலைக் கோயிலில் காணப்படும் மூன்றாம் இராசேந்திர சோழன் கல்வெட்டில் ஆழித்தேர் 'வித்தகப்பட்டன்' என்ற ஒருவரின் பெயர் காணப்படுகிறது. மேலும் கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூர் கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகளில் அக்கோயில் கணக்குகளை பராமரித்த ஆண்டார்களில் ஒருவரின் பெயர் 'ஆழித்தேர் வித்தகன் தில்லை நாயகன்' என்று குறிப்பிடப்படுவது சிறப்பானது.

திருவாரூர் ஆழித்தேர் சிறப்பின் மீது கொண்ட ஈடுபாட்டினால் அப்பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டிருப்பார்கள் எனக் கருத முடிகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த 'ஆழித்தேர்த் திருவிழா' திருவாரூரில் ஏப்ரல் 7-இல் நடைபெறுகிறது.

'மணியணி கண்டத்து எண்டோள் அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்ட அஞ்சல் நெஞ்சே' என்ற திருஞானசம்பந்தர் வாக்கால் வழிபடப் பெற்றது ஆழித்தேர்.

(தொல்லியல்துறை - பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT