முகப்பு
இளைஞர்மணி

விவேகானந்தரின் லட்சிய இளைஞன்

உலக வரலாற்றிலேயே ஒரு துறவியை லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை விவேகானந்தருக்கு மட்டுமே உரித்தானது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

உலக வரலாற்றிலேயே ஒரு துறவியை லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை விவேகானந்தருக்கு மட்டுமே உரித்தானது.

பொதுவாக ஆன்மிகத்துக்கும், இளமைக்கும் இடையேயான தூரம் சற்று அதிகம்தான். ஏனெனில் ஆன்மிகம் என்பது முதுமையோடு தொடர்புடைய விஷயம்போல சித்திரிக்கப்பட்டுவிட்டது. மேலும், ஆன்மிகமானது அன்பு, அமைதி, அடக்கத்தைப் போதிக்கும். ஆனால், இளமையோ துள்ளல், வேகம் மிகுந்தது. ஓடும் பாம்பைப் பிடிக்கும் வயது. இப்படி எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்தவர்தான் 

விவேகானந்தர்.

இவர் ஆன்மிகத்தை அன்றாட நடைமுறை வாழ்க்கையோடு சேர்த்து போதித்ததால்தான் இவ்வளவு இளைஞர்கள் இவர் மீதும், இவரின் போதனைகள் மீதும் ஆணித்தரமான நம்பிக்கையை வைத்துள்ளனர். மேலும், இவரின் கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாகவும், அவை முற்றிலும் இளைஞர் மற்றும் தேச நலன்குறித்து இருப்பதும் சிறப்புக்குரியது.

""100 இளைஞர்களைத் தாருங்கள்; இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்'' என்று கூறினார் என்றால், எந்த அளவுக்கு இளைஞர்கள் மீது அவர் நம்பிக்கை வைத்திருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இப்படி இளைஞர்கள் மீது அளப்பறிய நம்பிக்கை வைத்திருந்த விவேகானந்தரின் இளைஞன்,  ""எஃகை போன்ற தசைகளையும், இரும்பைப் போன்ற நரம்புகளையும், கடலின் அடியாழம் வரை செல்லநேரிடினும், எண்ணிய காரியத்தை கலங்காது முடிக்கும் நெஞ்சுரம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும்'' என்கிறார்.

மேலும் அவர் இளைஞர்களை ""சிங்கங்களே, நீங்கள் சிறு நரிகளின் கூச்சலைக் கண்டு அஞ்சாமல் முன்னேறிச் செல்லுங்கள். அப்போதுதான் எண்ணிய காரியத்தில் வெற்றி பெறமுடியும்'' எனக் கூறுகிறார். ""இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் வெற்றி கொள்ளக் கூடிய ஆற்றல் உங்களுக்குள்ளே ஒளிந்துள்ளது'' என இளைஞர்களுக்கு எழுச்சியேற்றுகிறார்.

""இளைஞர்களே, நீங்கள் பக்தி, பிரார்த்தனை மூலம் இறைவனைச் சென்றடைந்து முக்தியடைவதைக் காட்டிலும், கால்பந்தாட்டத்தின் மூலம்கூட பரமாத்மாவை அடைந்துவிடலாம்'' என்கிறார். அதாவது, செய்யும் செயல் எதுவோ அதில் முழு மனதோடு, மன ஒருமைப்பாட்டோடு ஈடுபட்டால், அதன்மூலம் இறைவனையே அடையலாம் என ஒரு புதிய பாதையைக் காட்டினார்.

அந்தப் பாதையைத்தான் இன்றைய இளைஞர்கள் கைக்கொண்டு கல்வி, கலை, அரசியல், விஞ்ஞானம் எனப் பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறந்து, தனக்கும், தான் பிறந்த பொன்னாட்டுக்கும் புகழை உண்டாக்கித் தருகிறார்கள்.

இன்றைய இளைஞர்களை நாம் சாதாரணமாகக் கருத முடியாது. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டுமென்ற வேகமும், பல்துறை அறிவும், சீரான சிந்தனையாற்றலும் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள்.

இனி, இளைஞர்களின் கையில் இனிய பாரதம் உருவாகி, சுவாமியின் கனவு விரைவில் பலிக்க உள்ளது மகிழ்ச்சியான விஷயம்.

முழு கட்டுரையைப் படிக்க →