தொழிற்சாலைகளில் கடினமான பணிகளை எளிதாக்க பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் தற்போது பாதுகாப்பு, மருத்துவம் ஆகிய துறைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
ரோபோக்களின் ஆதிக்கம் உலகம் முழுவதும் விரிவடைந்துள்ளது.
தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்களை அன்றாட பணிகளில் ஈடுபடுத்தும் ஆய்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டிருந்த கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆல்பபெட் எக்ஸ், தற்போது அதில் வெற்றி கண்டுள்ளது.
அந்த நிறுவனம் உருவாக்கிய சுமார் 100 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் கூகுள் அலுவலகத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்கள் மனிதர்களின் அசைவுக்கு ஏற்ப சூழலைப் புரிந்து கொண்டு மேஜையைத் துடைப்பது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது, கதவைத் திறந்துவிடுவது, தூய்மைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றன. தன்னைச் சுற்றி நடப்பனவற்றைத் தெரிந்து கொண்டு செயல்படும் வகையில், ரோபோவின் முகப்பில் ஏராளமான கேமராக்களும், சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஒருவர் மேஜையின் முன் அமர்ந்து இருக்கும்போது இந்த ரோபோக்கள் அருகே செல்லாமல், அவர் எழுந்து சென்ற பின்பு தானாக மேஜை அருகே வந்து அதைச் சுத்தம் செய்கின்றன.
மனிதர்கள் மீது மோதிவிடாமல் நடமாடவும் இதில் அதிநவீன சென்சார்கள் உள்ளன. பார்ப்பதற்கு ஒரு கை மனிதரைப்போல் உள்ள இந்த ரோபோக்களில் மற்றொரு கையையும் இணைத்து பயன்படுத்தலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கூகுளின் இந்த ரோபோ முழு செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் அலுவலகம், வீடு ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த பணியாளர்களின் தேவை குறைந்து, ரோபோக்களின் தேவை அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.