"கிளிஸரின் இல்லாமல் ஷூட்டிங் போகமாட்டேன்''
'தென்றல்' தொடரில் மென்மையான கதாபாத்திரத்தில் துளசியாக மனதை வருடிய ஸ்ருதி, தற்போது 'அபூர்வராகங்கள்' தொடரின் மூலம் பவித்ராவாக நம்மை மிரட்ட வருகிறார்.
'தென்றல்' தொடரில் மென்மையான கதாபாத்திரத்தில் துளசியாக மனதை வருடிய ஸ்ருதி, தற்போது 'அபூர்வராகங்கள்' தொடரின் மூலம் பவித்ராவாக நம்மை மிரட்ட வருகிறார்.
இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
தென்றல் தந்த மறக்கமுடியாத விஷயம் என்ன?
ஸ்ருதி என்கிற என் சொந்தப் பெயரை எனக்கு மறக்கச் செய்தது மறுக்க முடியாத உண்மை. நான் எங்கு சென்றாலும் இப்போதும் என்னை எல்லாரும் துளசி என்றுதான் அழைக்கிறார்கள். வெளி இடங்களுக்குச் செல்லும்போது யாராவது யாரையாவது துளசி என்றால் உடனே திரும்பி பார்க்கிறேன். இது மறக்க முடியாத விஷயம்தானே?
துளசிக்கும் இப்போது நீங்கள் நடிக்கும் பவித்ரா ரோலுக்கும் என்ன வித்தியாசம்?
துளசியாக ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாச்சு. பவித்ரா ரோல் ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. அதனால் அதைப்பற்றி இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் துளசியைவிட பவித்ரா இன்னும் போல்டான கேரக்டர்.
பொதுவாக ஹீரோயின்ஸ் என்றால் அதிக அலங்காரங்கள் செய்திருப்பார்கள், ஆனால் நீங்க சாதாரண மேக்-அப் கூட இல்லாமல் இருக்கீங்களே?
நீங்கள் சொல்வது போன்று சீரியல் கமிட் ஆகியிருக்கேன் என்று தெரிந்ததும், நிறைய மேக் -அப் சாதனங்கள், நகைகளை அம்மாவை அழைத்துக் கொண்டுபோய் வாங்கி வந்தேன். முதல்நாள் சூட்டிங் அன்று மேக்-அப் எல்லாம் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தேன். இயக்குநர் குமரன் சார் பார்த்துவிட்டு, ""மேக்-அப் எல்லாம் முடிஞ்சுதா, எல்லாத்தையும் அழிச்சுடுங்கம்மா. ஏனென்றால் நீங்க ஏழ்மை நிலையில, அப்பா இருந்தும் யாரோட சப்போர்ட்டும் இல்லாம இருக்கிற கேரக்டர். இதில் மேக்கப்புக்கு எங்க வேலை இருக்கு'' என்றார்.
சரி ஆடைகளையாவது புதுசு புதுசா கொடுப்பார்ன்னு நினைத்தேன். அதுவும் இல்ல. ஒரு மூன்று பாவாடை தாவணிகளையே மாற்றி மாற்றி ஒரு வருஷம் போட்டுக்கிட்டு இருந்தேன்.
அதுவுமில்லாமல் அழுதுக்கிட்டே இருக்கிறமாதிரி ரோல். இதுல எங்க மேக்கப் போடுறது. ஒரு கட்டத்தில் மேக்கப் பாக்ஸ் கொண்டு போறேனோ இல்லையோ? கிளிஸரின் பாக்ஸ் நிச்சயம் கொண்டு போவேன்.
நிஜத்தில் ஸ்ருதி எப்படி?
நான் நிஜத்திலும் ஓரளவு துளசி கேரக்டர்தான். என்னிடம் யாராவது சண்டை போட்டால் எனக்கு அழுகை வந்திடும். நான் திருப்பி சண்டையெல்லாம் போடமாட்டேன்.
அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் பற்றி?
எப்போதாவதுதான் கோர்ட்டுக்கு போகிற வக்கீல் கேரக்டர். நல்லவர்களுக்காக வதாடும் வக்கீல். எனக்கு சாதாரணமாகவே தமிழ் கொஞ்சம் திக்கும். இதில் வக்கீல் என்றதும் கோர்ட் சீன் எல்லாம் வந்தால் போய் வாதாடணும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த சீனில் எல்லாம் திக்கு முக்காடித்தான் பேசுவேன்.
உங்கள் நடிப்பை பார்த்து உங்கள் அம்மா பாராட்டி இருக்கிறார்களா?
நன்றாக நடித்திருக்கிறேன் என்று பாராட்டினால் அது நட்பு வட்டமும், வெளி ஆட்களும்தான். ஆனால் நான் என்ன செய்தாலும் திருப்தி அடையாதது எங்க அம்மா மட்டும்தான். நல்லா நடிச்சிருந்தால் டிரஸ் நல்லா இல்லை என்று சொல்வார்கள். அல்லது மேக்கப் சரியில்லை என்று சொல்வார்கள், அதுவும் இல்லை என்றால் நடை சரியில்லை என்பார்கள். ஹேர் ஸ்டைல் சரி இல்லை என்று சொல்வார்கள். அம்மா கொடுக்கிற இந்த இதுதான் என்னை ஒவ்வொரு முறையும் பெட்டரா செய்யணும்னு நினைக்க வைக்கும். அதிலும் தற்போது கொஞ்சம் எடை கூடிவிட்டேன். அதற்கு அம்மாதான் தினமும் திட்டித் தீர்த்துடுவார்கள்.
நிறைய மேக்கப் , நகை எல்லாம் போட்டு நடிக்கிற மாதிரி ரோல் வரணும்னு நினைத்திருக்கிறீர்களா?
அப்படி எப்பவுமே நினைத்தது இல்லை. தினமும் அவ்வளவு நகைகளோட நடிப்பது என்றால் செம போர். நிறைய நகைகளைப் போட்டுக் கொள்வது எனக்குமே பிடிக்காது.
உங்களுக்கு பிறகு நிறைய புது ஹீரோயின்ஸ் வந்துவிட்டார்களே? இந்த போட்டி எப்படி இருக்கு?
யார் வந்தாலும் அதை நான் போட்டியாக நினைத்ததில்லை. ஒருத்தரோட வாய்ப்பை ஒருத்தர் எப்பவும் தட்டிப் பறித்துவிட முடியாது. திறமை இருப்பவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள். நம்மோட வேலையை நாம் ஒழுங்காக செய்தால் போதும் எங்கேயும் போட்டி இருக்காது.