இரண்டு மொழி சீரியல்களும் ஒன்றுதான்!
மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என 21 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் மலையாள திரையுலகின் நாயகி வித்யா,
மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என 21 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் மலையாள திரையுலகின் நாயகி வித்யா, தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "வள்ளி' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை பக்கம் ஒதுங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம்:
"வள்ளி' தொடருக்குள் வந்தது எப்படி?
மலையாளத்தில் ஒரு தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் தோழி விஜயலட்சுமிதான் வள்ளி தொடரைப் பற்றி சொன்னார்கள். ஏற்கெனவே நாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் ஏதோ காரணத்தால் விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நீங்கள் நடிக்கிறீங்களா? என்றார். அப்போது கிட்டதட்ட 220 எபிசோட் முடிந்திருந்தது. இதற்கு மேல் நாயகியை மாற்றினால் ரீச் இருக்குமா? என்ற தயக்கம் இருந்தது. இருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எப்பவுமே எனக்கு உண்டு. ஏற்கெனவே " நேர் எதிர்' என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடித்த அனுபவமும் இருந்தது. அதனால் நடித்துதான் பார்ப்போம். சரியாக வந்தால் தொடர்ந்து நடிக்கலாம். இல்லையென்றால் விலகிக் கொள்ளலாம் என்றுதான் வந்தேன்.
ஆனால் தற்போது வள்ளி தொடரில் எனது கேரக்டரை டபுள் ரோலாக மாற்றும் அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ரோலில் டைட்டில் ரோலான வள்ளி கேரக்டரிலும், மற்றொரு ரோலில் பார்வையற்றவளாகவும் நடிக்கிறேன்.
பார்வையற்ற வேடம் என்றால் சவாலாக இருக்குமே?
நிச்சயமாக சவாலாகத்தான் இருக்கிறது. பார்வையற்றவர்கள் போல் ஒரு ஷாட் முழுவதும் விழியை வைத்திருக்கும்போது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஷாட் முடிந்ததும் நார்மல் ஆவதற்கே கொஞ்சம் நேரமாகும். விழியை அசைக்காமல் வைத்திருப்பதனால் தலைவலியும் இருக்கும். பிரண்ட்ஸ் எல்லாரும் இதுபோன்று நடிக்காதே, உடலுக்கு ஏதாவது தீங்கு செய்துவிட போகிறது. படம் என்றாலும் பரவாயில்லை விரைவில் முடிந்துவிடும். சீரியல் என்னும்போது ஆண்டுக்கணக்கில் இப்படியே நடிக்க முடியாது என்றார்கள். ஆனால், எனக்குள் ஓர் எண்ணம் நாம் கஷ்டப்பட்டு உழைக்கும்போது அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று. அதுபோன்றே தற்போது நான் எங்கே வெளியே சென்றாலும் என்னை அடையாளம் கண்டு பார்வையற்ற ரோலில் எப்படி நடிக்கிறீர்கள்? என்று விசாரிக்கிறார்கள். நான் தமிழில் நடிக்க வந்து 6 மாதம்தான் ஆகிறது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் மக்கள் என்னை அடையாளம் கண்டு பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழ் நன்றாகப் பேசுகிறீர்களே எப்படி?
நான் தமிழ் நன்றாகப் பேசுகிறேன் என்பதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. வள்ளி தொடரில் நடிக்க வந்தபோது கோ- ஆர்ட்டிஸ்ட், டைரக்டர் என யூனிட்டில் இருந்த அனைவருமே என் தமிழை கேட்டு சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாருடனும் பழகும் வரை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது ஓரளவுக்கு தமிழைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
மலையாள திரைப்படம், தொடர் என வேறு ஏதாவது நடிக்கிறீர்களா?
சமீபத்தில்தான் எனக்கும் மலையாள திரைப்பட ஹீரோவான வினுமோகனுக்கும் திருமணம் ஆனது. அதனால் தற்போதைக்கு மலையாளப் படம் எதுவும் கமீட் ஆகவில்லை. "நீலாம்பரி' என்ற மலையாளத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது வள்ளி தொடருக்கே நேரம் சரியாக இருப்பதால், அந்தத் தொடரில் இருந்தும் விலகிவிட்டேன். டைட்டில் ரோல் என்பதால் நம்மை சுற்றியே கதை நகருவதால் ஒரு தொடரை முடித்துவிட்டு வேறு புரொஜக்ட் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.
மலையாள சீரியல்களுக்கும், தமிழ் சீரியல்களுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
தமிழ் சீரியல்களுக்கு இருக்கும் அளவிற்கு மலையாள சீரியல்களில் அவ்வளவு ரீச் இல்லை. மற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது.