முகப்பு
மகளிர்மணி

அர்ப்பணிப்புதான் வெற்றிக்கான திறவுகோல்! - சாய்னா நேவால்

சாய்னா நேவால் உலக தர வரிசையில் நம்பர் 1 இறகுப் பந்தாட்ட வீராங்கனை. இவர் ஹர்வீர் சிங் - உமா ராணி ஆகியோருக்கு இரண்டாவது மகளாக 17 மார்ச்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

சாய்னா நேவால் உலக தர வரிசையில் நம்பர் 1 இறகுப் பந்தாட்ட வீராங்கனை. இவர் ஹர்வீர் சிங் - உமா ராணி ஆகியோருக்கு இரண்டாவது மகளாக 17 மார்ச் 1990-இல் பிறந்தார். இவரது தந்தை ஹர்வீர் சிங் எண்ணெய் வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணியாற்றி வந்தார்.

தந்தையின் பணி நிமித்தமாக அரியானாவில் உள்ள ஹிசார்-இல் இருந்து ஹைதராபாத்துக்கு 1998-இல் இவரது குடும்பம் குடி பெயர்ந்தது. அப்போது சாய்னாவுக்கு வயது 9.  பேசப்படும் தெலுங்கு மொழி இவருக்கு முதலில் சற்றே சிரமாக இருந்தது. அதனால் தன் வயதை ஒத்த நண்பர்களிடம் சுலபமாக உரையாட முடியாத நிலை. எனவே, ஓய்வு நேரங்களை வீணடிக்க விரும்பாத இவர் இறகு பந்தாட்டத்தில் கவனம் செலுத்தினார்.

இறகுப் பந்தில் இவரது கவனம் திரும்பியதற்கு, இவரது தந்தையும் தாயுமே காரணம். இவர்களிருவரும் அரியானாவில் மாவட்ட அளவிலான இறகுப் பந்தாட்ட வீரர்களாயிருந்தது முக்கிய காரணமாக இருந்தது. இதனால் இறகுப் பந்தாட்டத்தில் சிறப்பாக ஆடுவதற்கு அது அடித்தளமாக அமைந்தது.

உலக இளநிலை இறகுப் பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான்.

2009 ஜூனில் ஜாகர்த்தாவில் நடந்த இந்தோனேசிய ஒப்பன் இறகு பந்தாட்டப் போட்டியை வென்று வரலாறு படைத்த முதல் இந்தியப் பெண்ணும் இவர்தான்.

2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியர்.

பிரகாஷ் படுகோனேக்குப் பின்னர் உலக தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியர். உலக தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் பெற்ற இந்தியப் பெண்ணும் இவரே.

இத்தனை "முதல்' களைக் கொண்டிருக்கிறார் சாய்னா. ஆனால், எத்தனை வெற்றிகள் பெற்றிருந்தாலும் 1999-ஆம் ஆண்டு தன்னுடைய சிறுவயதில் பெற்ற முதல் வெற்றி தனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்ததாக கருதுகிறார் சாய்னா.

""எனது இந்தத் தொடர் வெற்றிக்கு முக்கியமான

பயிற்சியாளர்கள் கோவர்தன் ரெட்டி, சையது முகமது ஆரிஃப், கோபிசந்த், விமல் குமார் மற்றும் எனது பெற்றோர், ரசிகர்களும் இதில் அடங்குவர்'' என்று பெருமையுடன் கூறுகிறார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து பெற்ற பி.எம்.டபிள்யு. கார் சாய்னாவுக்கு கிடைத்த மறக்க முடியாத விலையுயர்ந்த பரிசு.

""கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்தோனேசியாவைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீரர் தாஃபிக் கிட்யாத் ஆகியோர், எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய விளையாட்டு வீரர்களாக உள்ளனர்'' என்கிறார் சாய்னா.

சமீபத்திய இவரின் மகிழ்ச்சி இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம பூஷன் விருது.

இறகுப் பந்தாட்டத்தில் சிறந்து விளங்க வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கும் பெண்களுக்கு சாய்னா தெரிவித்துள்ள சில அறிவுரைகள்:

""தங்களது  இலக்கை அடைய பொறுமை மிக அவசியம். அடுத்தது, தனக்கு பயிற்சி அளிப்பவர்களை நம்ப வேண்டும். அப்போது தான் நாம் முன்னேறிச் செல்ல உறுதுணையாக இருக்கும். அடுத்து முழு அர்பணிப்பு மிகவும் அவசியம். இந்த அர்ப்பணிப்புதான் வெற்றிக்கான திறவுகோல் என்பதை மறக்கக் கூடாது'' என சாய்னா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.