இருமுறை காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் பெற்ற குஜராத் மாநில காவல் துறையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை லஜ்ஜா கவ்ஸ்வாமி, 2017-ஆம் ஆண்டு நடந்த உலக போலீஸ் மற்றும் ஃபயர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று. ஆறு பதக்கங்களைப் பெற்ற முதல் பெண் காவல்துறை அதிகாரி என்ற சிறப்பைப் பெற்றவர். மீண்டும் இந்த ஆண்டு சீனாவில் நடந்த உலக போலீஸ் மற்றும் ஃபயர் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்கள் உள்பட நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளார். இந்த சாதனை குறித்து லஜ்ஜா கவ்ஸ்வாமி என்ன சொல்கிறார்:
""2017-ஆம் ஆண்டில் இது போன்ற போட்டிகளில் பங்கேற்று அதிக ரசிகர்கள் பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது. தனி போட்டிகளின் மூலம் தங்கப் பதக்கங்களைப் பெறுவது போன்ற திருப்தி வேறு ஏதுமில்லை. கடினமான இந்தப் போட்டிகளில் தேவையான புள்ளிகள் எடுக்க, எதிர்பார்ப்புகளுடன் அழுத்தம் கொடுத்து போட்டியில் பங்கேற்றதால் தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைத்துள்ளது.
வீட்டிற்குச் சென்று இந்த வெற்றியைக் கொண்டாட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. மூன்று மாதங்களுக்கொரு முறை ஒருவார விடுமுறையில் வீட்டிற்குச் சென்று பெற்றோரை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்ற நேரங்களில் காவல்துறை பணியுடன், பயிற்சியிலும் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் நான், மெதுவாக பழைய நிலைக்கு திரும்பலாமென நினைக்கிறேன்.
2022 -ஆம் ஆண்டு காமன் வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டியை ரத்து செய்ய போவதாக அறிவித்ததை தொடர்ந்து, காமன் வெல்த் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக இந்தியா அறிவித்திருப்பது, இந்திய விளையாட்டு வீரர்களிடையே வருத்தத்தையும், கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. காமன் வெல்த் போட்டிகளில் தான் இந்தியா கணிசமான அளவில் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. துப்பாக்கி சுடும் போட்டியாளர் என்ற முறையில், இந்த போட்டியை ரத்து செய்வது வருத்தமாக இருந்தாலும், இந்த விளையாட்டை மீண்டும் சேர்க்க வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.
அண்மையில் இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடும் போட்டியில் சிறு வயதிலிலேயே தங்கப்பதக்கம் பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. அவரது வயதில் நான் துப்பாக்கி சுடும் பயிற்சிபெற்றதில்லை. போட்டிகளில் பங்கேற்றதும் இல்லை. என்னைவிட இளையவரான இளவேனில் சாதனை மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதோடு, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பிக்ஸிலும் அவர் வெற்றி பெறுவார் என்றே நம்புகிறேன்.
என்னுடைய முகநூல் கணக்கை வெகு நாட்களுக்கு முன்பே ரத்து செய்துவிட்டேன். என்னுடைய சாதனைகளை முகநூலில் பதிவேற்ற நான் விரும்பவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அறிந்து கொள்வதிலும், பின் பற்றுவதிலும் எனக்கு உதவியாக இருக்குமென்பதால், சமூக வலைதளத்தை நான் கவனிக்க தவறுவதில்லை'' என்றார் லஜ்ஜா கவ்ஸ்வாமி.