பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் "எவிட்'
சர்வதேச நிறுவனத்தில் தன்னுடைய ஆளுமையின் பங்களிப்பை செலுத்தி, பல விருதுகளை வென்றெடுத்தவர், உமாஸ்ரீ ரகுநாத். பன்னாட்டு நிறுவனமான ஐபிஎம்-இல் குளோபல் அக்கவுண்ட் போர்ட் ஃபோலியோ மேலாளராகவும், மூத்த
சர்வதேச நிறுவனத்தில் தன்னுடைய ஆளுமையின் பங்களிப்பை செலுத்தி, பல விருதுகளை வென்றெடுத்தவர், உமாஸ்ரீ ரகுநாத். பன்னாட்டு நிறுவனமான ஐபிஎம்-இல் குளோபல் அக்கவுண்ட் போர்ட் ஃபோலியோ மேலாளராகவும், மூத்த தகவல் தொழில்நுட்ப வல்லுநராகவும் பணியாற்றி வருகிறார் உமாஸ்ரீ ரகுநாத். இவருக்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சூலூர். இப்போது, சென்னை மீனம்பாக்கத்தில் வசிக்கிறார்.
இவர், இளம் வயதிலேயே தன்னம்பிக்கையின் தனித்துவத்தைப் பெற்றவர். ஆம், இவருடைய தந்தை மரணிக்கும்போது, இவருக்கு ஒரே தங்கை மட்டுமே. உடன் பிறந்த சகோதரர் இல்லாததால், அப்பாவின் சடலத்திற்கு தீ மூட்டும் சடங்கை இவரே ஏற்றுக் கொண்டார். ஆண்கள் மட்டுமே செய்யும் அந்தச் சடங்கை முதல் முறையாக ஒரு பெண் செய்தது, அன்றைய ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. அதற்கு பின்பு சிறப்பாக படித்து, தனக்கான கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டார். இவை தவிர, லாப நோக்கற்ற எவிட் (பெண்களை மேம்படுத்துதல்) அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். அவரிடம் பேசியபோது:
""எவிட் அமைப்பின் நோக்கத்தைப் பொருத்தவரை அனைத்து நிர்வாக மட்டங்களிலும் பெண் பணியாளர்களை விரிவுபடுத்துவதற்கும், நிலைநிறுத்துவதற்கும், செழித்து வளருவதற்கும் ஆதரவை வழங்குவதற்காக நடத்தி வருகிறோம். அதன் மூலம் பெண்களை ஊக்கப்படுத்தி, அவர்களை தொழில் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவுகிறோம். மேலும், இன்றைய டிஜிட்டல் உலகத்தில், பணிதேடும் பெண்களுக்கு எளிமையாக இருப்பதற்கான வெப்சைட்டை தகவமைத்துள்ளோம். இன்னொரு பகுதியாக, பெண்கள் தொழில் முனைவோருக்கான அப் ஸ்கில்லிங் மற்றும் ரெஸ் கில்லிங் போன்ற பணிகளை செய்கிறோம்'' என்றார் உமாஸ்ரீ ரகுநாத்.
Advertisement
இவர்,தொழில் ரீதியாக கடந்த 21 ஆண்டுகளாக ஐடி / ஐடிஇஎஸ் சேவைகள் துறையில் பங்களிப்பு செய்துள்ளார்.
""சி.எஸ்.ஆர், சென்னை எஸ்.டி.இ.எம் தன்னார்வலர்களுடன், எங்களுடைய ஐ.பி.எம் திறன் வளர்ப்பு குழுவுடன், குழந்தைகளுக்கான திறன்வளர்ப்பு பிரசாரத்திற்கு கடந்த ஆண்டு சென்றோம். ஆண்டில் 5000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் சில அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். சென்னையில் கூட பல அடிப்படை வசதி இல்லாத பள்ளிகள் உள்ளன. அவற்றை கண்டறிந்து, அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறோம். இதுமட்டுமல்லாமல், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞராகவும் இருக்கிறேன். இதன் மூலம் பணியிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிகிறது'' என்கிற உமாஸ்ரீ ரகுநாத் உழைக்கும் பெண்கள், சாதனையாளர் விருது என 25-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.