மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!
மக்களவையில் கனிமொழி நோட்டீஸ் அளித்திருப்பது பற்றி...
மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வியாழக்கிழமை (ஏப்.16) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெறுகிறது.
Advertisement
இதில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கருப்புக் கொடியேற்றி, மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்தினார். மேலும், தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடியேற்றும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா - 2026, ஒன்றியப் பிரதேசச் சட்டங்கள் (திருத்த) மசோதா - 2026 மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா - 2026 ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக புதன்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.