முகப்பு
மகளிர்மணி

மணிப்பூர்  மாநிலத்தின் முதல் திருநங்கை  மருத்துவர்!

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தனியார் மருத்துவமனையொன்றில் மருத்துவராக பணியாற்றும் பியான்சி லைஷ்ராம் மணிப்பூர் மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தனியார் மருத்துவமனையொன்றில் மருத்துவராக பணியாற்றும் பியான்சி லைஷ்ராம் மணிப்பூர் மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி திருநங்கை சமூகத்திற்கே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பியான்சி, வட கிழக்கு மாநிலங்களிலும் முதல் திருநங்கை மருத்துவராவர். மணிப்பூரில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள திருநங்கை சமூகத்தினரை நுபி மான்பீ என்று குறிப்பிடுகிறார்கள்.

பிறப்பில் ஆணாக பிறந்தபோது இவரது இயற்பெயர் பூபோய் லைஷ்ராம் என்பதாகும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது, தான் ஓர் ஆணல்ல, பெண் என்பதை உணர்ந்தாராம். 2011-ஆம் ஆண்டு இம்பாலில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்ததும், 2013 -ஆம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியேறுவதென தீர்மானித்தார். இதை அறிந்த இவரது தந்தை மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்தாராம்.

2016 -ஆம் ஆண்டு இனியும் தன்னை ஆணாக அடையாளம் காட்டிக் கொள்ள முடியாது என்று கருதியவர், தன்னை திருநங்கையாக மாற்றிக் கொண்டதோடு, பியான்சி லைஷ்ராம் என்று பெயரையும் மாற்றிக் கொண்டார். திருநங்கைகளுக்காக நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு "வடகிழக்கு மாநிலகுமாரி திருநங்கை அரசி' என்ற பட்டத்தையும் பெற்றார்.

கடந்த ஆண்டு இம்பாலில் தனியார் மருத்துவமனையொன்றில், மருத்துவர் பணியில் சேர்ந்தவர், தனக்கான அடிப்படை வசதிகளைப் போராடிப் பெற்றுள்ளார். தற்போது முழுமையான பெண் தோற்றத்தில் இருப்பதால் இவரது குரலை வைத்தே இவர் திருநங்கை என்பதை கண்டுபிடிக்க முடியுமாம். இப்போது நாடெங்கும் பரவியுள்ள கரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இவர் செய்யும் சேவை பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →