கரோனா தந்த மாற்றம் !
கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் மாறிப்போன எத்தனையோ விஷயங்களில் அழகுத்துறையும் அழகு சாதனப் பொருள்கள் விற்பனையும் அடக்கம்.
கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் மாறிப்போன எத்தனையோ விஷயங்களில் அழகுத்துறையும் அழகு சாதனப் பொருள்கள் விற்பனையும் அடக்கம். இதற்கு முன்பு வரை அதிகமாக வாங்கப்பட்ட அழகு சாதனப் பொருளாக இருந்தது லிப்ஸ்டிக். ஆனால், இப்போது அது குறைந்துள்ளது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இருப்பதால், உதடுகளை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இன்னும் சில காலத்துக்கு இருக்காது. முக கவசம் அணியும் நிலையில் கண்கள் மட்டுமே தெரியும் என்பதால், பெண்கள் கண்களுக்கான அழகு சாதனங்களை அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
நுகர்வோரின் இந்த நடவடிக்கையை கவனித்த அழகுசாதனத் தயாரிப்பு நிறுவனங்கள், கண்களுக்கான அழகு சாதனங்களான மஸ்காரா, லைனர், ஐ ஷேடோ போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.
அதிகம் விற்பனையாகும் அழகு சாதனப் பொருள்களில் முதல் 5 இடங்களிலிருந்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஐ ஷேடோ. கண்களுக்கான அழகு சாதனங்கள் மட்டும் மொத்த மார்க்கெட்டில் 36 சதவிகிதம் இடம்பிடித்துள்ளன. இது தவிர, முகம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான பொருள்கள் ஆன்லைனில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சுத்தமும் சுகாதாரமும் வலியுறுத்தப்படும் கரோனா சூழலில், முகம் மற்றும் கைகளுக்கான கிரீம்களும் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.