சின்னத்திரை மின்னல்கள்!
பெரியத்திரையில் அறிமுகமாகி, "அரூபம்', "சலீம்', "உன்னால் என்னால்' போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்த சஹானா ஷெட்டி, "பகல் நிலவு' தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.
அழகான குடும்பத்தை இழந்துவிட்டேன்!
பெரியத்திரையில் அறிமுகமாகி, "அரூபம்', "சலீம்', "உன்னால் என்னால்' போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்த சஹானா ஷெட்டி, "பகல் நிலவு' தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன்பின், சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த "அழகு' தொடரில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 700 எபிசோடுகளுக்கு மேல் கடந்திருந்த "அழகு' தொடர் கரோனா பொதுமுடக்கத்தால் தொடர் முடிவுறாமலேயே திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால், இத்தொடரில் நடித்து வந்த பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், சஹானாவும் தனது வருத்தத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: "" அழகான ஒரு குடும்பத்தை இழந்தது போன்று இருக்கிறது. காரணம், படப்பிடிப்பு தளத்தில், வெறும் நடிகர்களாக மட்டும் இல்லாமல், ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். அப்பா தலைவாசல் விஜய், அம்மா ரேவதி, ஸ்ருதி, மணிகண்டன், அஷிதா, நிரஞ்சனி, அவினாஷ், காயத்ரி என அனைவரையும் மிகவும் மிஸ் பண்ணுகிறேன்.
அழகு குடும்பத்தின் நினைவுகள் என்றென்றும் அழகுதான்'' என தெரிவித்திருக்கிறார்.
மைனாவுக்கு மகன் பிறந்தார்!
விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை நந்தினி.
இவர், கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற தொடர்களில் நடித்து வந்த நடிகரும் நடன இயக்குநராகவும் இருந்து வரும் யோகேஷ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பொது முடக்க காலத்தில் நடிகை மைனா கர்ப்பமாக இருந்து வந்தார். சமீபத்தில் தான் இவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்ததை ரசிகர்களின் பார்வைக்காக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர் இருவரும். இந்நிலையில் நந்தினிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.