தோழி பொங்கல்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் எம்.ஒ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் சார்பில்
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் எம்.ஒ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் சார்பில் சமீபத்தில், சென்னை திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் "தோழி பொங்கல்' என பெயரிடப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் லலிதா பாலகிருஷ்ணன் கூறியதாவது:
""பொதுவாக எங்கள் கல்லூரி மாணவிகள் கல்வி மட்டுமின்றி கலை, சுயதொழில், ஊடகம் எனப் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், மாணவிகள் கல்வி கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. சமூகத்தின் மீதும் அக்கறையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவ்வப்போது கல்லூரியின் சார்பில் என்.எஸ்.எஸ் முகாம் நடத்தி அதன்மூலம் அந்தப் பகுதியில் எங்களால் முடிந்த சமூக நலப் பணிகளை செய்து வருகிறோம்.
அந்த வகையில், சென்ற 2019-2020 ஆம் ஆண்டு, சமூகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பல தோழிகளுக்குத் தோள்கொடுத்து தொழில் முனைவோர் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன் முக்கிய நோக்கம், வீட்டைவிட்டு வெளியே வர வாய்ப்பில்லாமல் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு சிறு தொழில் பயிற்சி அளித்து, அவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களால் முடிந்த கைத் தொழில்களை செய்து வருமானத்தை ஈட்டிக் கொள்ள வழிவகை செய்து தர வேண்டும் என்ற எண்ணம்தான்.
இதற்காக "தொழில் செய்யலாம் தோழி' என்ற நிகழ்வையும் உருவாக்கினோம். அதற்காக 18 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள கிராமப்புற பெண்களுக்கு ஊதுபத்தி செய்வது, சாம்பிராணி தயாரிப்பு, கிரீட்டிங் கார்ட் செய்வது, பேப்பர் பை செய்வது, தையல் கலை, உணவு பொருளில் சாட் ஆயிட்டம் செய்வது, சிறியளவில் மேக்கப் செய்யும் பயிற்சி போன்ற 20 வகையான சிறு தொழில்களின் பயிற்சியை அளித்தோம். இந்தப் பயிற்சிகளையெல்லாம் எங்கள் கல்லூரி மாணவிகளே அவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.
இதில் ஒன்றுதான் பானையில் வண்ணம் தீட்டுவதும், ஓவியம் வரைவதும். பொங்கல் பண்டிகை சமயத்தில் இதுபோன்று வண்ணம் தீட்டிய பானைகளை விற்பனை செய்தால், மக்கள் விரும்பி வாங்கிச் செல்வார்கள். இதன்மூலம் அந்த ஏழைப் பெண்களுக்கும் வருமானம் ஈட்டிக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணினோம்.
இதற்காக, பொங்கல் பண்டிகைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு "தோழி பொங்கல்' என்ற விழாவினை ஏற்பாடு செய்தோம். இந்த விழாவை திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்களுடன் கொண்டாட விரும்பினோம். ஏனென்றால் கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சமூக நலபணிகள் நிறைய மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் இந்தப் பகுதி பெண்களுக்கும் நாங்கள் நன்கு அறிமுகமாகியிருந்தோம்.
இந்நிகழ்வில், பங்குபெறும் 25 தோழிகளுக்கு, 6 வண்ண
மிடப்பட்ட பானைகளும், 19 வண்ணமிடாத பானைகளும் வழங்கினோம். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பெண்களுக்கும், பானையில் வண்ணங்களால் அலங்கரிக்கும் பயிற்சியும் அளித்து, வரைதலுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கினோம். இதனால், அப்பெண்கள் பானையில் வண்ணம் இடும் முறையை கற்றுக் கொண்டதுடன் அப்பானைகளை விற்றும் பயன் அடைந்தனர்'' என்றார்.
படங்கள்: சௌமியா