முகப்பு
மகளிர்மணி

உணவகத்தில்  வாசகசாலை!

தில்லியைச் சேர்ந்த உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் ஆதிகா மன்ஜர் (32) தான் வடிவமைக்கும் கட்டடங்களில் எந்த ஒரு பகுதியையும் வீணாக்காமல் பயன்தரும் வகையில் சிறப்பாக வடிவமைத்து தருவது வழக்கமாகும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

தில்லியைச் சேர்ந்த உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் ஆதிகா மன்ஜர் (32) தான் வடிவமைக்கும் கட்டடங்களில் எந்த ஒரு பகுதியையும் வீணாக்காமல் பயன்தரும் வகையில் சிறப்பாக வடிவமைத்து தருவது வழக்கமாகும்.

இவரது வாடிக்கையாளர்களில் ஒருவர், தில்லியில் பரபரப்பாக உள்ள ஒமக்ஸ் வோர்ல்ட் தெருவில், தான் நடத்தி வரும் உணவகத்தில் காலியாக இருந்த இடத்தில், புதுமையாக பயனுள்ள வகையில் ஏதாவது செய்து தரும்படி ஆதிகாவிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த பகுதியில் நிறைய பள்ளிக் கூடங்கள் இருந்ததால் குழந்தைகளைக் கொண்டு வந்து விடவும். அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அடிக்கடி அந்த உணவகத்திற்கு வந்து செல்வதை அறிந்த ஆதிகா, குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் சிறிய விளையாட்டு கூடமொன்றையும், புத்தக வாசகசாலை ஒன்றையும் ‘மெராக்' என்ற பெயரில் வடிவமைத்துக் கொடுத்தார்.

இந்தியாவிலேயே உணவகம் ஒன்றில் "புக் கபே' என்ற பெயரில் வாசகசாலை அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

உணவகத்திற்கு வருபவர்கள் சிற்றுண்டி மட்டும் சாப்பிட்டுவிட்டு போகாமல், சிறிது நேரம் குழந்தைகளை விளையாட வைக்கும் நேரத்தில் பெரியவர்கள் புத்தகங்கள் படிக்க வசதியாக வாசகசாலை ஒன்றையும் அமைத்துள்ள இந்தப் புதுமையான திட்டத்திற்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன. ஆதிகாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் அமைத்த புக் கபேயில் அப்படி என்ன விசேஷம்?

வடிவமைப்பு கலைஞரான ஆதிகா, பிறவியிலேயே மோனோகுலர் விஷன் என்ற குறைபாடுடன் பிறந்தவராவர். மோனோகுலர் விஷன் என்பது பிறவியிலேயே ஒரு கண்ணில் பார்வை இருக்காது. மற்றொரு கண்ணுடன் சேர்ந்தாற் போல் பார்க்க முடியாது. இந்தக் குறைபாட்டை பொருட்படுத்தாமல் ஆர்கிடெக்ட் பயின்று, 2017 -ஆம் ஆண்டு சொந்தமாக டிசைன் ஸ்டுடியோ ஒன்றை அமைத்து திறமையுடன் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

மெராக்கில் இவர் தன்னை போல் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து சுலபமாக உணவகத்தில் உள்ள புக் கபேவுக்கு வர வசதியாக சரிவு மேடை ஒன்றை. அமைத்ததோடு, ரெஸ்ட் ரூம் செல்லவும் வசதி செய்துள்ளார்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான பிரெய்லி புத்தகங்களையும் வாசகசாலையில் இடம் பெறச் செய்தார். யாருடைய உதவியுமின்றி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மாற்றுதிறனாளிகள் புத்தகங்களை எடுத்து படிப்பதற்கு வசதியாக உள் கட்டமைப்பை வடிவமைத்திருந்தார். இவை அனைத்துமே புக் கபேயின் சிறப்பு அம்சமாகும்.

இதுவரை உணவகங்கள், பல் பொருள் அங்காடி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள் என 150-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்கட்டமைப்புகளை செய்து கொடுத்திருந்தாலும் மெராக் மட்டும் இன்றும் என்மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது'' என்கிறார் ஆதிகா மன்ஜர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.