பெண்களுக்கான சட்ட உரிமைகள்!
வரதட்சணைத் தடுப்புச் சட்டம்: திருமணபந்தம், குடும்ப வாழ்வு என்ற அடிப்படையில் பெண்களின் வாழ்வுரிமையே வரதட்சணை என்ற பெயரில் பறிக்கப்படுகிறது.
(சென்ற வார தொடர்ச்சி..)
வரதட்சணைத் தடுப்புச் சட்டம்: திருமணபந்தம், குடும்ப வாழ்வு என்ற அடிப்படையில் பெண்களின் வாழ்வுரிமையே வரதட்சணை என்ற பெயரில் பறிக்கப்படுகிறது. திருமணம் நடைபெற்ற பின்னும், ஆயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர். இவற்றைத் தவிர்க்க, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், வரதட்சணைக் கொடுமையை, வாழ்வுரிமை மறுப்பு என்ற அடிப்படையில் நோக்கவும், வன்முறைகளைத் தடுக்கவும். மீறி நடப்பவர்களைத் தண்டிக்கவும் சட்ட விழிப்புணர்வு பெண்களுக்கு அவசியமாகிறது.
வரதட்சணை என்பது திருமணம் தொடர்பாக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெறப்படுகின்ற மதிப்பு வாய்ந்த பொருளையும் பணத்தையும் குறிப்பிடும்.
Advertisement
வரதட்சணை கேட்பதும் குற்றம், தருவதும் குற்றம்.
இக்குற்றம் திருமணத்திற்கு முன்போ, திருமணத்தின் போதோ, திருமணத்திற்கு பின்போ நிகழலாம்.
இக்குற்றம் புரிந்தவருக்கு, 5 ஆண்டுகளுக்கும் குறையாத சிறைத்தண்டனையும், ரூபாய் 15,000 அல்லது வரதட்சணையின் மதிப்புத் தொகை இவற்றில் எது அதிகமோ அதை அபராதமாக விதிக்கலாம்.
வரதட்சணைத் தடுப்புச்சட்டம் 1984- இல் திருத்தப்பட்டு, 1985-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.
இச்சட்டப்படி திருமணத்தின்போது, மணமக்களுக்குத் தரப்படும் சீர்வரிசைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, அதில் இரு சாராரும் கையெழுத்திட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பட்டியலில், ஒவ்வொரு பரிசைப் பற்றிய சுருக்கமான குறிப்பு, பரிசுகளின் தோராய மதிப்பு, அதைக் கொடுத்தவரின் பெயர், உறவுமுறை ஆகிய அனைத்தும் குறிக்கப்பட வேண்டும்.
மணமகளுக்குக் கொடுக்கப்படும் சீர் மற்றும் பரிசுப் பொருட்கள் அனைத்தும், மணமகன் வீட்டாரிடம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் சட்டப்படி மணமகளுகே சொந்தம், அவள் கேட்கும்போது அவளுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.
அப்படித் தரவில்லையென்றால், அது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406-இன் படி குற்றமாகும். அக்குற்றவாளிக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ. 5000 முதல் ரூ. 10000 வரை அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இயற்கைக்கு மாறான காரணங்களால், ஒரு பெண் திருமணமான 7 ஆண்டுகளுக்குள் இறந்தால், அம்மரணம் வரதட்சனைச் சாவாகக் கருதப்பட்டு, அப்பெண்ணின் கணவன் மற்றும் அவன் குடும்பத்தினர் தண்டிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும்.
ஒரு பெண் திருமணமான 7 ஆண்டுகளுக்குள் இறந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.
புகார் பெற்றவுடன், காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அருகில் உள்ள குற்றவியல் நீதிபதியிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த இதழில்...