முகப்பு
சிறுவர்மணி

நாடுகள் அறிவோம்: சிங்கப்பூர்

சிங்கப்பூர் குடியரசு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாகும். மலாய் தீபகற்பத்திற்கு தென் பகுதியிலும் பூமத்திய ரேகைக்கு வடக்கே 137 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ள தீவு நாடு. மொத்தம் 63 தீவுகளைக் கொண்ட நாடு.

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:53 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:49 PM

சிங்கப்பூர் குடியரசு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாகும். மலாய் தீபகற்பத்திற்கு தென் பகுதியிலும் பூமத்திய ரேகைக்கு வடக்கே 137 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ள தீவு நாடு. மொத்தம் 63 தீவுகளைக் கொண்ட நாடு. மனிதர்களே இல்லாத பல குட்டித் தீவுகளும் இதில் அடங்கும்! உலகின் மிகச் சிறிய 20 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று!

கி.பி. 2-ம் நூற்றாண்டில் மனிதர்கள் இங்கே வசிக்கத் தொடங்கினர்.  அப்போது முதல் பல்வேறு அரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்து வந்தது. 1819-ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த ஜோஹர் சுல்தானிடம் அனுமதி பெற்று, ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்தியக் கம்பெனி இங்கே ஒரு வணிகத் தலத்தை நிறுவியது.  

1824-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிங்கப்பூரை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து ஆங்கிலக் காலனி நாடுகளில் ஒன்றாக மாற்றினர்.

Advertisement

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானியர்கள் சிங்கப்பூரை ஆக்கிரமித்தனர்.

பின்னர் சிறிது காலம் மலேசியாவுடன் இணைந்திருந்தது.  1963-க்குப் பிறகு தனி நாடாக உருவெடுத்தது.

அன்று ஆரம்பித்த வளர்ச்சி இன்று சிங்கப்பூரை, ஆசியாவின் செல்வம் மிக்க, நான்கு நாடுகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது.  உலகின் மிகவும் சுறுசுறுப்பான 5 துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்று.

சிங்கப்பூரின் அரசியலமைப்பு ஆங்கிலேய பாதிப்பில்தான் அமைந்திருக்கிறது.  சட்டங்களும் ஏறக்குறைய இங்கிலாந்தில் உள்ளது போலத்தான்!

சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 50 லட்சம். பெரும்பாலோர் சீனர்கள், மலாய் இனத்தவர் மற்றும் இந்திய வம்சாவளியினர். இதில் ஏறக்குறைய 30 லட்சம் பேர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். மற்றவர்களெல்லாம் பிழைக்க வந்தவர்கள்.

மலாய் மொழியில் "சிங்கபுரா' (சிங்க நகரம்) என்றிருந்ததுதான் பின்னர் ஆங்கிலேயர்களால் சிங்கப்பூர் என்று அழைக்கப்பட்டு, அதுவே நீடித்துவிட்டது.  ஆனால் இங்கு சிங்கங்களே கிடையாது.  பழங்கால மன்னர் ஒருவர் இங்கு ஒரு சிங்கத்தைப் பார்த்ததாகவும் அதனால் சிங்கபுரா என்று அவர் பெயரிட்டார் என்றும் கூறுகின்றனர்.  ஆனால் அவர் புலியைப் பார்த்துவிட்டு சிங்கம் என்று நினைத்துக் கொண்டாராம்!

உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சிங்கப்பூரில்தான், முதன் முதலில் இரவு மிருகக்காட்சி சாலை அமைக்கப்பட்டது.  இரவிலும் இந்த உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்து ரசிக்கும்படி பல வசதிகளை அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

இங்குள்ள ஜுராங் பறவைப் பூங்காவில் 30 மீட்டர் உயரமுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இதுதான், மனிதனால் அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளில்  உலகிலேயே மிகவும் உயரமானது!

சிங்கப்பூரின் பெரும்பான்மை மக்கள் அக்டோபரில் பிறந்தவர்கள் என்பது ஓர் ஆச்சரியத் தகவல்! 93 சதவீத மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

அரசின் அதிகாரப்பூர்வமான மொழிகள் : மலாய், சைனீஸ், தமிழ் மற்றும் ஆங்கிலம்.

தலைநகரம்: சிங்கப்பூர்.

பரப்பளவு: 660 சதுர கிலோமீட்டர்கள்.

மதம்: பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம், டாவோ மற்றும் கன்ஃபூசியன்.

நாணயம்: சிங்கப்பூர் டாலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.