கருவூலம்: நகரத்துக்குள் ஒரு நாடு!
பொதுவாக ஒரு நாட்டிற்குள் பல நகரங்கள் இருக்கும். ஆனால் ஒரு நகரத்தின் எல்லைக்குள் ஒரு நாடு உள்ளது. அதுதான் வாடிகன்! 0.44 ச.கி.மீ. பரப்பளவும், சுமார் 800 பேர்
பொதுவாக ஒரு நாட்டிற்குள் பல நகரங்கள் இருக்கும். ஆனால் ஒரு நகரத்தின் எல்லைக்குள் ஒரு நாடு உள்ளது. அதுதான் வாடிகன்! 0.44 ச.கி.மீ. பரப்பளவும், சுமார் 800 பேர் (2010இன் கணக்கெடுப்பின்படி) மக்கள் தொகையும் கொண்டது இது!
ரோமன் கத்தோலிக்கர்களின் புனிதத்தலம்! மற்றும் தலைமையகம் ஆகும்! அதிகாரபூர்வமாக தன்னாட்சி பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது வாடிகன்!
இத்தாலியின் தலைநகர் ரோம் ஆகும். இதன் எல்லைக்குள்தான் டைபர் நதியின் மேற்குக் கரையில் மிகச் சிறிய நாடான வாடிகன் அமைந்துள்ளது. வாடிகனுக்குள் நுழைய வேண்டுமென்றால் இங்குள்ள ஆறு நுழைவாயில்களில் ஏதேனும் ஒன்றின் வழியாகத்தான் செல்லவேண்டும். வாடிகனில் உள்ள கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களினால் எல்லை முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 1929இல் ஏற்கெனவே இருந்த கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களைக் கொண்டே எல்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Advertisement
19ஆம் நூற்றாண்டுக்கு முன் இப்பொழுது இத்தாலி என அழைக்கப்படும் நாடு இருக்கவில்லை. இந்த தீபகற்ப பிரதேசம் மன்னராட்சிக்கு உட்பட்டிருந்தது. தற்போதைய ரோம் நகரம் பண்டைய காலத்தில் ரோமானிய சாம்ராஜ்யம் என்ற பெயரில் பரந்து விரிந்து செழித்து இருந்தது. இந்த சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில்தான் ஏசுநாதர் அவதரித்த "பெத்லஹேம்' நகரம் இருந்தது.
கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இங்கு மதம் பரவத் தொடங்கிவிட்டது! முதல் போப் புனித பீட்டர் காலத்திலிருந்தே ரோம் நகரமே போப் ஆண்டவரின் வசிப்பிடமாக இருந்தது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் சுமுகமான உறவு நிலவவில்லை.
காலப்போக்கில் ரோம் நகரை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்டதானது. கி.பி. 756 முதல் 1870 வரை பேபல் ஸ்டேட்ஸ் (டஅடஉக நபஅபஉந) போப் ஆண்டவர்களே இப்பகுதியை ஆட்சி செய்தனர். இதனால் அரசர்களுக்கும், போப் ஆண்டவர்களுக்கும் இடையில் அதிகாரத்திற்கான போட்டி பலகாலம் தொடர்ந்தது. இதில் இருதரப்புக்கும் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி கிடைத்தது.
18ஆம் நூற்றாண்டில் இந்த தீபகற்ப பிரதேசம் பல சிற்றரசுகளாகவும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும் மாறி விட்டது. இதனால் பல புரட்சிகள் (1815முதல்1870வரை) ஏற்பட்டு இத்தாலி என தனி நாடு உருவானது. ரோமும் இத்தாலிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஆனால் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டினை போப் ஆண்டவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பிரச்னைக்கு முடிவு ஏற்படுத்தும் வகையில் 1929ஆம் ஆண்டு இத்தாலியின் ஆட்சியாளராக இருந்த முசோலினியும் போப் ஆண்டவரும் செய்து கொண்ட "லேட்டரன் உடன்படிக்கை' (கஅபபஉதஉச பதஉஅபவ) யின்படி வாடிகன் நாடு உருவானது.
மேலும் இத்தாலியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செயின்ட் ஜான் பஸிலிகா, சாந்தா மரியா மேக்லோர், செயின்ட் பால் பஸிலிகா, கேஸல் கோன்டோலோபோ, தேவாலயங்களும், கட்டிடங்களும் வாடிகனின் அதிகாரத்திற்குட்பட்டன என ஒப்புக்கொள்ளப்பட்டது.
போப் ஆண்டவரே வாடிகனின் தலைவராவார். இந்த நாட்டிர்கென தனிக்கொடி, அஞ்சல் மற்றும் தந்தி சேவை, வங்கி அமைப்பு, தொலைதொடர்பு மையம், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையங்கள், செய்தித்தாள், என அனைத்தும் உள்ளது. ஆனால் உணவு, மின்சாரம், தண்ணீர், எரிவாயு போன்றவை இத்தாலிய அரசிடமிருந்து பெறப்படுகிறது.
வாடிகனின் எல்லைக்குள் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட் உலகப் புகழ் பெற்ற புனித பீட்டர் பேராலயம், புனித பீட்டர் சதுக்கம், சிசுடைன் சாப்பல், நூலகம், அருங்காட்சியகம், என பல கட்டிடங்கள் உள்ளன. இவை யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய சின்னமாக 1984இல் அறிவிக்கப்பட்டது.
புனித பீட்டர் பேராலயம் மற்றும் சதுக்கம்
உலகிலுள்ள தேவாலயங்களில் இரண்டாவது பெரிய தேவாலயமாகும் இது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மிகவும் புனதமான வழிபாட்டிடம்.
கத்தோலிக்க மரபின்படி இத்தேவாலயம் ஏசுவின் முதன்மை சீடரும் முதல் போப் ஆண்டவருமாகிய புனித பீட்டர் கல்லறை மீது அமைந்துள்ளது.
இந்த இடத்தில் 4ஆம் நூற்றாண்டில் மன்னராக இருந்த கான்ஸ்டண்டைன் கட்டிய ஓர் ஆலயம் முதலில் இருந்தது. அதன் மீது இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த பேராலயம் கி.பி. 1506 முதல் 1626 வரை சுமார் 120 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது. ரோமில் உள்ள பல புகழ் பெற்ற கட்டிடங்களில் முதன்மையானது. 730அடி நீளமும், 500அடி அகலமும், 425அடி உயரமும் கொண்டது.
ஆலயத்தின் நுழைவாயில் பல கதவுகளை கொண்டது. இதன் மைய குவிமாடம் (ஈஞஙஉ) மிகவும் பெரியதும் 390அடி உயரமானதும் அழகானதும் ஆகும். இதனை புகழ் பெற்ற இத்தாலிய ஓவியர் "மைக்கேல் ஆஞ்ஜலோ' வடிவமைத்துள்ளார்.
பேராலயத்திற்குச் செல்வதற்கு புனித பீட்டர் முற்றத்தைக் கடந்து வரவேண்டும். இம்முற்றம் 116 மீட்டர் நீளமும் 53மீட்டர் அகலமும் கொண்ட திறந்தவெளி ஆகும். இது இரண்டு பிரிவுகளாக உள்ளது. முதல் பிரிவு முட்டை வடிவிலும், இரண்டாம் பிரிவு செவ்வக வடிவிலும் உள்ளது.
முகப்பின் இருபுறமும் உயர்ந்த தூண்கள் நான்கு வரிசையாக உள்ளன. பலபடிகள் ஏறியே வாயிலை அடைய வேண்டும். படிகளின் இருபுறமும் 18.2அடிகள் உயரமுள்ள புனித பீட்டர், புனித பவுல் சிலைகள் உள்ளன. இந்த முற்றத்தில்தான் கிறிஸ்துமஸ் மற்றும் விழாக்காலங்களில் மக்கள் பிரார்த்தனை செய்ய கூடுவார்கள்.
வாடிகன் அரண்மனை
தேவாலயத்திற்கு வடக்கே 13.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பல காலகட்டங்களில் கட்டப்பட்ட ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல கட்டடங்களாக உள்ளது. போப் ஆண்டவரின் அதிகாரபூர்வ உறைவிடமும், அலுவலகமும் இங்குள்ளது. இப்பகுதியில் உள்ள போர்ஜியா அபார்ட்மென்ட், மற்றும் ராபெல் ரூம்ஸ் சுவர்களில் மிகவும் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் 1400க்கும் அதிகமான அறைகள் உள்ளன.
சிசுடைன் ஆலயம் (SISTINE CHAPEL)
உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்கள் இவ்வாலயத்தின் சுவர்களையும் கூரைகளையும் அலங்கரிக்கிறது.
இங்கு மைக்கேல் ஆஞ்ஜெலோவினால் வரையப்பட்ட "கடையித் தீர்ப்பு' ஓவியம் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆலயத்தின் கூரையில் பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து நிகழ்வுகள் பலவற்றை அழகான ஓவியங்களாக வரைந்துள்ளார்.
மேலும் இவ்வாலயத்தில் புகழ்பெற்ற ஓவியர்களாகிய பெருகினோ, ஸான்ட்ரோ போட்டிசிலி, தோமினிகோ, கிர்லாண்டாஜோ, லூகா ஸைனோரெல்லி, போன்ற புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களும் உள்ளன.
அருங்காட்சியகம்
பழங்கால விலை மதிப்பில்லாத கையினால் எழுதப்பட்ட ஏடுகள், புத்தகங்கள், ரோமானிய மற்றும் கிரேக்க பழங்கால நினைவுச் சின்னங்கள், புகழ் பெற்ற ஓவியங்கள், அழகிய சிற்பங்கள், முதலியவை பாதுகாத்துப் பராமரிக்கப்படுகிறது. அருங்காட்சியகம் பல கட்டிடங்களாக உள்ளது.
வாடிகன் நூலகம்
80,000க்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள், பழைய ஆவணங்கள், 16லட்சத்திற்கும் மேலான அச்சிடப்பட்ட புத்தகங்களும், நாணயங்கள், பதக்கங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், வரைபடங்கள், என அனைத்தும் வாடிகன் நூலகத்தில் உள்ளது.
இலட்சக்கணக்கான மக்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இங்குள்ள அழகான கட்டிடங்களையும், அருங்காட்சியகத்தையும், காண்பதற்காக சுற்றுலா வருகிறார்கள்.