முகப்பு
சிறுவர்மணி

குடத்திலிட்ட விளக்கு!

சீன நாட்டு அரசர், புகழ் பெற்ற தத்துவ ஞானி கன்பூஷியûஸப் பார்த்து, ""நீங்கள் ஒரு ஞானி என்று எல்லோரும் மதிக்கிறார்கள்....அரச சபையிலும் முக்கிய செல்வாக்கைப் பெற்றிருக்கிறீர்கள்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:04 PM
பகிர்:

சீன நாட்டு அரசர், புகழ் பெற்ற தத்துவ ஞானி கன்பூஷியûஸப் பார்த்து, ""நீங்கள் ஒரு ஞானி என்று எல்லோரும் மதிக்கிறார்கள்....அரச சபையிலும் முக்கிய செல்வாக்கைப் பெற்றிருக்கிறீர்கள்....மிக மிகப் பிரபலமடைந்திருக்கிறீர்கள்!....உங்களைப் போலவே ஞானியாக இருந்துகொணடு பிரபலமடையாத மகான்கள் இந்த உலகில் உள்ளனரா?'' என்று கேட்டார். 
""ஓ!....நிறையப் பேர் இருக்கிறார்களே!'' என்றார்.
""அப்படியா? நான் அவர்களைச் சந்திக்க வேண்டுமே!...முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.
""கண்டிப்பாக!'' குடத்தில் இட்ட விளக்கு போன்று ஒளிர்ந்துகொண்டு தனது உயரிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் தந்து வாழ்ந்து கொண்டிருப்போர் பலரில் ஒருவருடன் உங்களை நான் சந்திக்க வைக்கிறேன்..... வாருங்கள்!...'' என்று அரசனை அழைத்தார். 
இருவரும் ஒரு கிராமப்புறத்தை அடைந்தனர். அது கோடைக்காலம்!....வெயில் தகித்தது!....வெகுதூரம் நடந்ததால் இருவருக்கும் பசியும் தாகமும் எடுத்தது! 
வழியில் ஒரு மரத்தடியில் முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ஒரு மண் பானை! அது நிறையக் குடிநீர்! அருகில் ஒரு கூடை அது நிறைய கடலைச் சுண்டல்! 
களைத்துப் போயிருந்த இருவரும் முதியவரிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தனர். முதியவர் இருவருக்கும் இலையில் கொஞ்சம் சுண்டல் வைத்துக் கொடுத்தார்! இருவரும் மீண்டும் தண்ணீர் வாங்கிக் குடித்தனர். இருவரும் களைப்பு நீங்கிப் புத்துயிர் பெற்றனர். 
அரசருக்கு முதியவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது! அவரைப் பாராட்டி நன்றி கூறினார். பிறகு சில நாணயங்களை எடுத்து அவரிடம் கொடுக்க முயன்றார். 
முதியவர், ""நான் என்ன கடையா நடத்துகிறேன்.... இந்த வழியாக அருகிலுள்ள கிராôமங்களுக்கு விவசாய வேலை செய்ய மனிதர்கள் நடமாடுவார்கள். அவர்களின் பசி, தாகம் போக்குவதற்காக இப்படி தண்ணீர் பானையுடன் உட்கார்ந்து இருக்கிறேன்....அவ்வளவுதான்!..... ஏதோ இந்த தள்ளாத வயதில் என்னால் முடிந்தது....வீட்டில் தனியாக உட்கார்ந்துகொண்டு, வீண் பொழுது கழிப்பதால் யாருக்கு என்ன லாபம்?...என்று நினைத்துப் பார்த்தேன்! இந்த எண்ணம் தோன்றியது!.... செயல்படுத்திவிட்டேன். இதைப் புரிந்து கொள்ளுங்கள். அது போதும் எனக்கு'' என்று மகிழ்ச்சியோடு அவர்களை வழியனுப்பி வைத்தார். 
மன்னர் குடத்திலிட்ட விளக்குபோல் மற்றுமொரு ஞானியைக் கண்ட திருப்தியுடன் கன்பூஷியஸூடன் விடைபெற்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.