கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!
கேரளத்தில் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் மேற்கொள்வது பற்றி...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக இன்று முதல் பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கேரளத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று முதல் மூன்று நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், கேரள பயணம் மேற்கொள்ளும் தேஜஸ்வி யாதவ், மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிகாரில் காங்கிரஸுடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த தேஜஸ்வி யாதவ் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், கேரளத்தில் காங்கிரஸுக்கு எதிரான கூட்டணியில் இணைந்துள்ளார்.
கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டு வரும் சூழலில், தேஜஸ்வி யாதவை இடது முன்னணி களமிறக்கியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் கடைசி வரை முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காதது, கூட்டணிக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தியது உள்ளிட்டவை கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.