கதைப் பாடல்: கோடைக்காலம் வந்தது!
குளிரும் பயந்து ஓடிடவே கோடைக் காலம் தொடங்கியதே!
குளிரும் பயந்து ஓடிடவே
கோடைக் காலம் தொடங்கியதே!
ஒளிரும் சூரியன் ஆட்சியிலே
உடலை வெயிலும் வாட்டிடுதே!!
மண்ணும் பொன்னும் உருகிடுதே
மண்ணில் பயிர்கள் கருகிடுதே!
தண்ணீர் எல்லாம் வற்றிடுதே
தாகம் நமக்கு மிகுந்திடுதே!
தண்ணீர் நிறைய குடித்திடணும்
தலைக்கு எண்ணெய் தேய்த்திடணும்
கண்களைக் கவனமாய்க் காத்திடணும்!
குளிர்ந்த நீரில் குளித்திடணும்!
பருத்தி ஆடை நம்முடலைப்
பாது காப்பாய் வைத்திருக்கும்!
அருவியாய் வியர்வை கொட்டாமல்
அதுவும் நம்மைக் காத்திருக்கும்!
நீருடன் மோரும் இளநீரும்
நமதுடல் சூட்டைத் தணித்துவிடும்!
சீருடன் உடலை வைத்திருந்தால்
சித்திரை வெயிலும் பணிந்து விடும்!
வெய்யில் கொளுத்தும் நேரத்தில்
வீதியில் வேண்டாம் விளையாட்டு!
செய்யும் செயல்கள் இனிதானால்
சிறந்திடும் நமது உடற்கட்டு!