சிறுவர்மணி

கரடி

ஐயா.. எங்க காடு அழிஞ்சிட்டு வருது.. உணவுதேடி ரொம்ப அலையவேண்டியிருக்கு.. அதான், மனிதர்கள்கிட்ட வேலை பார்த்து ஏதாவது வாங்கிட்டுப் போலாம்னு..

க.சங்கர்

அரங்கம்!
 
 காட்சி : 1
 இடம் : வயல் / வடக்குப் பகுதி
 நேரம் : மாலை
 மாந்தர் : வயிரவன், கரடி.
 (வயிரவன் பாத்தி வெட்டிக்கொண்டிருக்கிறார்.)
 
 (குரல்) : ஐயா..!
 (வயிரவன் திரும்பிப் பார்க்கிறார்.)
 
 கரடி : ஐயா.. எனக்கு ஏதவாது வேலை கொடுங்கய்யா.. நல்ல
 விதமா செய்வேன்..
 வயிரவன் : யார் நீ..? எங்கிட்ட ஏன் வந்து வேலை கேட்கிறே..?
 கரடி : ஐயா.. எங்க காடு அழிஞ்சிட்டு வருது.. உணவுதேடி ரொம்ப அலையவேண்டியிருக்கு.. அதான், மனிதர்கள்கிட்ட வேலை பார்த்து ஏதாவது வாங்கிட்டுப் போலாம்னு..
 (வயிரவன் புரியாமல் பார்க்கிறார்.)
 
 கரடி : உங்க சந்தேகம் புரியுது, ஐயா.. நான் பல இடங்கள்ல வேலை செஞ்சிருக்கேன்.. என்னால் உங்களுக்கு உதவ முடியும்..
 வயிரவன் : இதுக்கு முன்னாடி எங்க இருந்தே..?
 கரடி : முத்துமாணிக்கம்னு ஒருத்தர்கிட்ட இருந்தேன்.. அவர் பக்கத்து நாட்டுக்குப் போயிட்டார்.. அதுக்கப்புறம் எங்கெங்கேயோ முயற்சி பண்ணியும்..
 வயிரவன் : சரி.. நாளைக்கு காலையில வா.. ஏதாவது வேலை தர்றேன்..
 (கரடியின் முகம் மலர்கிறது.)
 
 
 காட்சி : 2
 இடம் : வெவ்வேறு இடங்கள்
 நேரம் : வெவ்வேறு நேரங்கள்
 மாந்தர் : வயிரவன், கரடி.
 முதல் மாதம் : கரடி நிலத்தில் உழவு செய்கிறது.
 இரண்டாம் மாதம் : கரடி கிணற்றிலிருந்து நீர் இறைக்கிறது.
 மூன்றாம் மாதம் : வயிரவன் பயிர்களின் இடையே கனையெடுக்கும் கரடியைப் பார்க்கிறார்.
 
 காட்சி : 3
 இடம் : வீடு
 நேரம் : இரவு
 மாந்தர் : வயிரவன், அமுதா.
 (வயிரவன் உணவு சாப்பிடுகிறார்.)
 
 அமுதா : ( கையில் பாத்திரத்துடன்) இன்னொன்னு வெக்கட்டுமா..? ஒண்ணே ஒண்ணு..
 வயிரவன் : இல்ல.. இல்ல.. போதும்.. கரடிக்கு ஏதாவது கொடுத்து விட்டயா.. ?
 அமுதா : வழக்கம்போல் பழங்கள்தான் .. கொடுத்துட்டேன்..
 வயிரவன் : ( கை கழுவியபடி) அந்தக் கரடியைப் பத்தி என்ன நினைக்கிறே.. ?
 அமுதா : நல்லா வேலை செய்யுது.. நாம எதுவும் சொல்லத் தேவையே இல்ல.. ரொம்ப பொறுப்பா இருக்கு..
 வயிரவன் : எனக்கும் அதேதான் தோணுது.. நாம தர்ற கொஞ்சம் உணவுக்காக.. பாவம், எத்தனை வேலை செய்து..!
 அமுதா : ஆமாங்க.. நாம நல்ல நிலைமைக்குப் போறப்போ அந்தக் கரடிக்குனு எதாவது பண்ணணும்..
 (வயிரவன் அமைதியாக இருக்கிறார்.)

காட்சி : 4
 இடம் : வயல் / தெற்குப் பகுதி
 நேரம் : காலை
 மாந்தர் : வயிரவன், கரடி.
 
 (வயிரவன் சோகமாக அமர்ந்திருக்கிறார்.)
 
 கரடி : ஐயா.. எல்லாத்தையும் மூட்டையா கட்டிட்டேன்.. மொத்தம் அறுபது சேர்ந்திருக்கு..
 வயிரவன் : ( கவனிக்காமல் ) என்ன.. ஓ.. முடிச்சுட்டியா.. சரி.. நீ கிளம்பு..
 (கரடி அமைதியாக நிற்கிறது.)
 
 வயிரவன் : ம்ம்ம்ம்..?
 கரடி : ஐயா.. இன்னிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?
 வயிரவன் : ( பெருமூச்சு விட்டு ) இந்த வியாபாரம் நமக்குப் போதாது, கரடி.. இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தணும்..
 கரடி : உங்ககிட்ட என்ன யோசனை இருக்கோ அத சொல்லுங்க.. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்..
 வயிரவன் : யோசனைய பத்தி இல்ல.. நிலம் வேணும்.. கூடுதலா பயிர்செய்ய இடம் வேணும்..
 கரடி : நமக்குப் பக்கத்துலயே இவ்ளொ விளைநிலம் இருக்கே.. அதேயே வாங்கிக்கலாமே..
 வயிரவன் : ( சோகமாக) பணம்..?
 (கரடி இமைக்காமல் பார்க்கிறது.)
 
 காட்சி : 5
 இடம் : வயல் / மரத்தடி
 நேரம் : மதியம்
 மாந்தர் : அமுதா , வயிரவன், கரடி.
 
 (அமுதா ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாள்.)
 
 வயிரவன் : வடகரை கணக்கு மட்டும் எவ்வளவு ஆகுது..?
 அமுதா : இருபதாயிரத்து முந்நூறு.. கொஞ்சம் பரவால்ல..ஆனா, சரியான நேரத்துக்குப் பணம் வந்துருமா..?
 (கரடியின் குரல் உரக்கக் கேட்கிறது.)
 
 கரடி : (குரல்) ஐயா.. ஐயா.. ஐயா..
 வயிரவன் : ( பதறி எழுந்து ) என்ன.. என்ன கரடி.. என்ன விஷயம்..?
 கரடி : (மூச்சிரைக்க) ஐயா.. அம்மா.. நான்.. நான் மண்ணை உழுறப்போ.. இதோ.. இது கெடச்சுது..
 (கரடி ஒரு கல்லை நீட்டுகிறது.)
 வயிரவன் : (ஆச்சர்யமாக) என்ன கல் இது..?
 அமுதா : (கையில் வாங்கி ) ஏதோ கல்.. இது.. ஏதாவது மதிப்புமிக்க கல்லா இருக்கலாம்..
 வயிரவன் : ( மகிழ்ச்சியாக) அப்படியா..? அப்ப நாம இப்ப யாராவது ரத்தின வியாபாரியைச் சந்திக்கணும்..
 (கரடி அமைதியாகப் பார்க்கிறது.)
 
 காட்சி : 6
 இடம் : துறைமுகம் / மேற்குப் பகுதி
 நேரம் : முற்பகல்
 மாந்தர் : ரத்தின வியாபாரி , வயிரவன்.
 (ரத்தின வியாபாரி கல்லைச் சோதனைசெய்து பார்க்கிறார்.)
 வயிரவன் : கொஞ்சம் பார்த்துக் குடுங்க, ஐயா..
 ரத்தின வியாபாரி : நல்ல கல்லுதான்.. இது உங்களுக்கு எப்படிக் கெடச்சுது..?
 வயிரவன் : ( அமைதியாக இருந்துவிட்டு) நிலத்தை உழவு பண்ணும்போது கிடைச்சது..
 (ரத்தின வியாபாரி சிறிது நேரம் வயிரவனைப் பார்க்கிறார்.)
 
 வயிரவன் : ஐயா..?
 ரத்தின வியாபாரி : பொய்.. அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்ல.. உண்மையைச் சொல்லுங்க..
 வயிரவன் : ( அதிர்ந்து ) ஐயா.. நான் சொல்றது உண்மைதான்..
 ரத்தின வியாபாரி : உண்மை என்னன்னா.. இந்த அரிய ரத்தினக் கல்லை எங்கிட்ட வேலைசெஞ்ச ஒரு கரடிக்குத்தான் கொடுத்தேன்.. அதை நீங்க எப்படியோ ஏமாத்தியிருக்கீங்க..
 வயிரவன் : ( சிந்தனைக்குப் பிறகு) நீங்க.. உங்க பேர்.. முத்துமாணிக்கமா..?
 ரத்தின வியாபாரி : ( வியப்பாக) ஆமா.. உங்களுக்கு எப்படித் தெரியும்..?
 (வயிரவனின் கண்கள் அகல விரிகின்றன.)
 
 காட்சி : 7
 இடம் : வயல் / கிழக்குப் பகுதி
 நேரம் : மாலை
 மாந்தர் : அமுதா, வயிரவன், கரடி.
 
 (அமுதாவின் கைநிறைய பணம் இருக்கிறது.)
 
 அமுதா : நாம நெனைச்ச மாதிரியே விளைச்சலுக்கான நிலத்தை வாங்கிடலாம்.. அதிகமாவே பணம் இருக்கு..
 வயிரவன் : ( திரும்பி ) என்ன கரடி.. அதிர்ஷ்டம் தான்னில்ல..?
 கரடி : (தடுமாறி) ஆமா, ஐயா..
 வயிரவன் : நன்றிக்காக உனக்கு ஒன்னு கொண்டுவந்திருக்கேன்.. (கொடுத்து) இந்தா..
 கரடி : ( அதிர்ந்து) எப்படி..?
 (கரடியின் கையில் ரத்தினக் கல் இருக்கிறது.)
 
 வயிரவன் : முத்துமாணிக்கம்தான் கொடுத்தார்.. உன்னோட பழைய முதலாளி . .
 (கரடி அமைதியாக இருக்கிறது.)
 
 அமுதா : (புரியாமல்) இங்க என்ன நடக்குது..?
 (வயிரவன் விரிவாகச் சொல்கிறார்.)
 
 வயிரவன் : துறைமுகத்துக்குப் போறப்போ கரடியோட நேர்மையப் பாராட்டி அவர் கொடுத்துட்டுப் போனதுதான் இந்தக் கல்.. விலை மதிப்பானது..கரடி நமக்கு உதவி பண்றதுக்காக ..
 அமுதா : (இடைமறித்து) புரியுதுங்க.. எதையும் எதிர்பார்க்காம கொண்டுவந்து கொடுத்திருக்கு.. ரொம்பப் பெரிய மனசு..
 கரடி : ( சட்டென்று) ஐயா.. கல்லைத் திருப்பிக் கொடுத்துட்டீங்க.. அப்றம் பணம் மட்டும்.. எப்படி வந்துச்சு..?
 வயிரவன் : ம்ம்ம்.. எல்லாம் அந்த வியாபாரி கொடுத்ததுதான்..
 அமுதா : ( அதிர்ந்து) ஐயோ.. கடனா..?
 கரடி : திருப்பிக் கட்டுறது கஷ்டமாச்சே..
 வயிரவன் : (சிரிப்புடன்) கடன் இல்ல.. முதலீடு.. விளைச்சல்ல வர்ற லாபத்துல அவருக்கும் ஒரு பங்கு.. மூணுல ஒரு பகுதி..
 அமுதா : மூணுலயா.. ? அப்போ மீதி..?
 வயிரவன் : நமக்கு ஒரு பகுதி.. கரடிக்கு ஒரு பகுதி..
 கரடி : ( வியப்பாக) ஐயா, எனக்கா..?
 வயிரவன் : ஆமா, கரடி.. உன்னோட நல்ல மனசுக்காகத்தான் அவர் இந்த உதவியைச் செய்யறதா சொன்னார்..
 அமுதா : உன் நேர்மையைப் பாராட்ட என்ன வேணாலும் பண்ணலாம், கரடி..
 (கரடி அமைதியாகப் புன்னகை செய்கிறது.)
 
 (திரை)
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT