"அசோக்குமார்' படத்திலேயே கலைவாணர் என்.எஸ்.கே. ஏற்ற பாத்திரத்துக்கு ஒரு சிறப்பு வசனம் உண்டு. எடுத்தற்கெல்லாம், " இவரு சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு?'' என்பார். இந்தப் படம் வந்ததும் இந்த வாக்கியம் வேகமாகப் பிரபலமாகியது.
அந்தச் சமயம் இவர் நாகர்கோவிலில் இருந்து காரில் கன்னியாகுமரிக்கு போய்விட்டு திரும்பும் போது, ஓரிடத்தில் பெட்ரோல் போட வேண்டியிருந்தது. பங்கில் நிறுத்தியதும் பையன் வந்து, "எத்தனை காலன் ? சார்'' என்றான்.
"ஐந்து காலன்'' என்றார் டிரைவர்.
தற்செயலாய் வண்டியின் உள்ளே பார்த்தவன் கலைவாணரைப் பார்த்துவிட்டான். துள்ளிக் கொண்டு போய் பெட்ரோல் போட்டான்.
"எவ்வளவு ரூபாய் அப்பா?'' என்று கேட்டார் கலைவாணர்.
"இருபத்து அஞ்சு ரூபாய்'' என்றான் பையன்.
அப்போது பெட்ரோலின் அளவான காலன் மூணு ரூபாய்தான். விலை பத்து ரூபாய் அதிகம் வாங்குறானே என்று நினைத்த அவர், "எப்படியப்பா?'' என்று கேட்டார்.
"எப்படியா? இருபத்தஞ்சு ரூபாய்தான். இவர் சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு?'' என்று கலைவாணர் பாணியில் கூறினான்.
"இருபத்தஞ்சுஎன்னா, அம்பது ரூபாயே தரலாம். பில் வாங்கிட்டு வா'' என்று அனுப்பினார் கலைவாணர்.
பையன் ஆபிசுக்கு ஓடினான்.
டிரைவரை கார் எடுக்கச் சொல்லிப் புறப்படு என்றார் கலைவாணர். பில்லுடன் விழுந்து அடித்துகொண்டு ஓடி வந்தான் பையன்.
"சார் .. பணம் கொடுக்காமல போறீங்களே'' என்றான் பையன்.
"ஆமா! இவர் போன போனதுதான். எவரு? இவரு?'' என்று சிரித்துக் கொண்டே கூறினார் கலைவாணர். சொன்னபடியே போய்விட்டார்.
பையன் ஓடிச் சென்று பங்க் முதலாளியிடம் நடந்ததைக் கூறினான். "'போனால் போகட்டும் விளையாட்டுக்குச் செஞ்சிருக்கார். வந்திடுவார்டா'' என்றார் முதலாளி.
கலைவாணரின் கார் வரவில்லை. போனது போனதுதான்.
சில நாள்கள் கழித்து, பெட்ரோல் பங்க் விலாசத்துக்கு ஐம்பது ரூபாய் மணியார்டர் வந்தது.
"பில் பணம் போகப் பாக்கியை அந்தப் பையனிடம் கொடுத்துவிடுங்கள். இவர் சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு?'' என்று பாரத்தின் கீழ் எழுதியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.